என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, June 4, 2008

காதலியல்

நீ, காதலிக்கிறேன்
என்று சொல்லாததினாலேயே
எனது காதல்
ஆழமாகிக் கொண்டிருக்கிறது.

---- o~0~*~0~o ----

பேருந்து வருகிறதாவென்று
பார்ப்பது போல
என்னைப் பார்ப்பாய்,
நான் சிரித்து விடுவேன்
நீ வெட்கத்தில் சிவந்துவிடுவாய்.

---- o~0~*~0~o ----

எதற்காகவோ அழுது கொண்டிருந்தாய்
என்னவென்று தெரியாமலேயே
கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தேன்.

---- o~0~*~0~o ----

நீ தலையில் வைத்துக்கொண்ட
ஒற்றைப் பூவைத் தவிர
உன் தோட்டத்திலுள்ள
மற்றவையெல்லாம் வாடிவிடுகிறது.

---- o~0~*~0~o ----

பூமிக்கும் வானத்திற்கும்
பெரிய சண்டை.
பூமி உன்னை அழகென்கிறது
வானம் இல்லையென்கிறது.
ஒரு முறையாவது தலையைத் தூக்கி
வெட்கப்படு, வானம் வசப்படும்.

---- o~0~*~0~o ----

உன் வீட்டு வாசலின் மரத்தில்
பூக்களே இருப்பதில்லை - உன்
பாதம் படுவதற்காக
அத்தனையையும் உதிர்த்து விடுகிறது.

---- o~0~*~0~o ----

உன் மேல் விழுந்துவிட்ட
உதிர்ந்த பூக்களெல்லாம்
மோட்சம் அடைந்துவிட்டதாக
முணுமுணுத்துக் கொண்டது.

---- o~0~*~0~o ----

நிலவு வந்தும் நாம்
இன்னும் மறையவில்லையாவென
குழம்பிவிட்டது மதியத்தில்
உன்னைப் பார்த்தச் சூரியன்.

---- o~0~*~0~o ----

கண் தெரியாதவர்களுக்குச் சாலையைக்
கடக்க நீ உதவும் போதெல்லாம்
காதல் குருடன் நானென
மனசுக்குள் சத்தமாக கத்திவிடுகிறேன்.

---- o~0~*~0~o ----

உன் முகத்தைப் பார்க்க வரும்
முடியை நீ பின்னால் தள்ளிவிட்டும்
முன்னாலேயே வருவது போல
நீ வேண்டாம் என்று சொன்ன பிறகும்
நான் காதலித்துக் கொண்டே இருக்கிறேன்.

---- o~0~*~0~o ----

நீ என்றோ உலர வைத்துக்
காற்று கொண்டு போன
வண்ணச் சுடிதார் வானத்தில்
வானவில்லாகக் காட்சியளித்தது இன்று.

---- o~0~*~0~o ----

நீ என்னிடம்
"நான் உன்னைக் காதலிக்கிறேன்"
என்று சொல்லமலேயே இருக்கலாம்.
எனது இதயம் அதைத் தாங்குமா
என்ற சந்தேகம் இருக்கிறது.

---- o~0~*~0~o ----

காதலைச் சொல்வதற்காக
காகிதத்தில் எழுதுகிறேன்,
சிறிதும் என்னைக் கேட்காமலேயே
சிறகு முளைத்துப் பறந்து விடுகிறது கடிதம்.

---- o~0~*~0~o ----

புதுப் பேனா வாங்கி உனது
பெயர் எழுதி விட்டு வேறு
எதையும் எழுத மனசில்லாமல்
எடுத்து வைத்து விடுகிறேன் பத்திரமாக.

---- o~0~*~0~o ----

நீ என் கனவில் வருவதே இல்லை,
நினைத்து மறந்துவிட்டவைதான்
கனவில் வருமாமே!

---- o~0~*~0~o ----

உன்னைத் தொட்டுவிடுவதற்காகவே
உள்ளே இருக்கும் தண்ணீரெல்லாம்
அலையாக கரைக்கு வந்துகொண்டிருக்கிறது.

---- o~0~*~0~o ----

நீ கால் நனைக்காமல்
போய்விட்டதால்
அழுது அழுது கடல்
அதிகமாக உப்புக்கரிக்கிறது.

---- o~0~*~0~o ----

நான் நினைக்கும் பொழுதெல்லாம்
நீ தும்மலிடுகிறாயாவெனத் தெரியாது
ஆனால், நீ தும்மலிடும்பொழுதெல்லாம்
நான் நிச்சயம் உன்னைத்தான்
நினைத்துக் கொண்டிருப்பேன்.

---- o~0~*~0~o ----

ச்சீப் போடாவென்று
சினுங்கிக் கொண்டே
அனைத்துக் கொண்டாய் - காதலென்றாலே
அனைத்தும் தலைகீழ்தான்.

---- o~0~*~0~o ----

உன் கண்ணில் விழுந்த
தூசியெடுக்க முயன்று எடுத்தும்விட்டேன்,
தவறி நானல்லவா விழுந்துவிட்டேன்.

---- o~0~*~0~o ----

3 comments:

said...

gybi have just saw ur website. just for seeing. No comments.

said...

////உன் மேல் விழுந்துவிட்ட
உதிர்ந்த பூக்களெல்லாம்
மோட்சம் அடைந்துவிட்டதாக
முணுமுணுத்துக் கொண்டது.////


முணுமுணுத்துக்கொண்டது என்றால் ஏதோ உடன்பாடற்ற முணுமுணுப்பாகத்தோன்றுகிறது.

முழங்கிக்கொண்டது என்றோ முழக்கமிட்டது என்றோ எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என்கருத்து. குறுங்கவிதைகள் அனைத்தும் ரசிக்கும் படியாக அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்.

said...

உண்மைதான். எனக்குத் தோன்றவில்லை. நான் எழுதிய போது எனது சிந்தனை இப்படி இருந்தது. "நமக்குத் தெரிந்தால் அதை நாமும் செய்து விடுவோமோ என்று தயக்கத்துடன், அந்தக் காரியத்தைச் செய்து முடித்த இருவர் பேசிக் கொள்வார்கள் அல்லவா, அதாவது முணுமுணு என்று". இது போல ஒரு எண்ணத்தில் எழுதினேன். ஆனால் படிப்பவர்களுக்கு நீங்கள் சொன்னது போல்தான் புரியும். நன்றி உங்கள் கருத்துக்கு.

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal