என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Sunday, November 9, 2008

மேகங்களே! ஓ மேகங்களே!

மேகங்களே! ஓ மேகங்களே!
மெல்ல மெல்ல மிதந்து
செல்லும் வானத்து நுரைகளே
செல்லமாக தவழ்ந்து போகும்
நிலையாமையின் தத்துவங்களே!

நித்திரையின்றிச் செல்லும்
நீர் நிரப்பிகளே!
சொல்வீர்களா எங்கிருந்து
வருகிறீர்கள் என்று?

நீ பிறந்த தேசமெதுவோ?
நினக்கு இனம், மொழி
தடையல்லவோ?

தண்ணீர் தரமறுக்கும்
மனிதன்கண்ணில் மண்தூவி
வந்தனையோ சமத்துவத்தை
வாழ வைக்க?
வாழி நீ!

காடு மலைகளையும்
எல்லைக் கோடுகளையும்
தாண்டி வரும் ஆவிகளே!
மன்னிப்பாய்
உன் பிறந்த இடம் தெரியாது
நீ விழுந்த இடத்தில் நின்று கொண்டு
எனது எனது என
மார்தட்டும் பாவிகளை!

உலகத்துப் பொருட்கள் யாவும்
உன்னுள் காட்டுகின்றாய்
உடனே அவைகளை மாற்றுகின்றாய்
உயிர்களைப் பேணுகின்றாய்
கோபத்தால் அழிக்கின்றாய்
கடவுளரோ நீங்கள்?

தவழ்ந்த தடமெதுவும்
பதியாது போகிறீர்களே,
முதலிரவு அறைக்குள்
அன்னநடை போடும்
நங்கையரோ நீங்கள்?
அல்லது பொருளைத்
திருடும் கள்வர்களோ நீங்கள்?

தூது சொல்லி அனுப்பியதாரோ
நீங்கள் சுமக்கும் சேதியெதுவோ?

மனமிருந்தால் உயர்வாயென்றும்
தலைகனத்தால் வீழ்வாயென்றும்
தத்துவம் சொல்லும்
மாமேதைகள் நீங்கள்!

மனம் வெளுத்தால் வான்புகழுண்டென்றும்
தீநெறி கருத்தால் தாழ்வாயென்றும்
உண்மைகள் சொல்லும்
உயர்ந்தோர்கள் நீங்கள்!

எடுப்போம் எங்கிருந்தும்
கொடுப்போம் சமமாயென
கம்யூனிஸம் பேசும்
காரல்மார்க்ஸுகள் நீங்கள்!

மேகவுடல் நீத்து
வன்கடல் புகுந்து
மீண்டும் மேகமாவதால்
ஆன்மாவின் தத்துவத்தை
அறிவிக்கிறீர்கள் நீங்கள்!

வானம் நிரப்பும் மேகங்களே
வாருங்கள் கூக்குரலிட்டு
சேருங்கள் சேதி சொல்லுங்கள்
நிரப்புங்கள் மனித மனப்பள்ளங்களை!

Friday, November 7, 2008

காதல், கானகம் - பகுதி 28

எங்கே
உங்களது நண்பர்கள்?
என்றாள்.

பத்து நிமிடம்
நடந்தால் அவர்கள்
குடில்.

காட்டிலாக்காவிற்கு
கடுமையாக உழைப்பவர்கள்.
இயற்கை மருத்துவத்தை
ஆராய்ச்சி செய்யும்
மருத்துவர் ஒருவரது
சீடர்களும் இப்பொழுது.

எங்கும் தோழர்கள் என்று
எனக்கு யாருமில்லை
நான் தாமரை போல்
நட்பென்னும் தண்ணீரில்
நனையாதே வளர்ந்தேன்.

தாமரை இலைகள்தான்
தண்ணீரில் ஒட்டுவதில்லை
வேர்கள் தண்ணீரிலே
விளையாடிக் கொண்டுதான் இருக்கும்.

தோழமைதான் சமுதாயம்
தெரிந்து கொள்வதற்கான கருவி.
விதவிதமான மனிதர்களிடம்
விளம்ப வேண்டும்
கேள்வி ஞானத்தின்
வேள்வி அதுவே.

சர்ச்சைகளும்
சண்டைகளும்
சமாதானங்களும்
சமமாகக் கொண்டது.

நட்புக்குள் இருக்கும்
முரண்பாட்டைக் களைய
முடிச்சுகளாய்ப் போடப்படும்
அன்பும், விட்டுக் கொடுத்தலும்
ஆரோக்கியமாக்கி விடும் நட்பை.
உளிகளின் அடிகள் சிலைக்கு
வலிகள் அல்ல!

பிரிகின்ற இல்லறங்களை விட
பிரிகின்ற நட்புகள் நிச்சயம்
குறைவாகத்தான் இருக்கும்.

எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாத
எந்த உறவுகளும் பிரிவதில்லை

அய்யா,
வாங்க சாமி - உடன்
வந்திருப்பது வீட்டம்மாங்களா?
என்று அன்புடன்
எதிர்கொண்டது,
காதலின் நண்பர்கள்.

எத்தனை முறை
எடுத்துரைத்தாலும்
"அய்யா" என
அழைக்கும் பழக்கத்தை
அறுக்காதவர்கள்.

இவன் இம்ரான்
அவன் ஆரோக்கிய சாமி
எனது தோழர்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, November 6, 2008

உயிர்த்தெழு ஒவ்வொருமுறையும் - செதுக்கப்பட்ட மறுபிரசுரம்

காதலின் தோல்விதனில்
தன்னையிழந்து தவிக்கும் தருணம்
உன் பூக்களும் இலைகளும்
உதிர்க்கப்பட்டிருக்கலாம்
குளிரின் குரூரத்தால்.
காற்று பிரிந்த கூடு
தன்மையாய் போவதியல்புதான்.

இருக்கட்டுமே நீ
இருப்பது அண்டார்டிகா
அல்லவே அசோகவனம்தான்,
அற்பமாய் உதிர்ந்த இலைகள்
எடுத்து உன் வேருக்கு
எருவாய் இட்டுக் கொள்
உயிர்த்தெழுவாய் பிறிதொருமுறை.

அன்பாய், நட்பாய்,
ஆதரவாய், தாங்குதலாய்,
ஏன்? மீண்டும் காதலாகக்கூட
திரிந்து பரவட்டுமுன்
உடைந்து போன காதல் மனம்,
உன் இலைகளும் பூக்களும்
மறுபடி பிறந்தெழுந்து
மணம் வீசட்டும் பாரெங்கும்.

காதல், கானகம் - பகுதி 27

பயத்தினில் இரு வகை
உயிர் போகுமோ என்ற பயம்
மானம் போகுமோ என்ற பயம்

உயிர் பயம்
உடைப்பதற்கு
அறிவியல் போதும்
அடுத்ததை தவிர்ப்பதற்கு
நல் அனுபவம் வேண்டும்
நம்மைச் சுற்றி
நடப்பவைகளை
புரிந்திருத்தல் வேண்டும்
புன்னகையும் வேண்டும்.

சந்தேகப் பேய் ஒழி
சாதிப் பேய் கட
முடிந்தவரை உதவு
மூடப்பழக்கம் ஒழி
புன்னகை தரி
புளங்காகிதம் அடையாதே
அறிவு வளர்
அண்டம் தெளி
கல்வி கல்
களவு மற
தெரிந்ததைப் பேசு
தெரியாதது அறி
வீடு மற
நாடு பாரு

இதை செய்யும்போதே
இருக்கும் பயமெல்லாம்
பயந்து ஓடும்.

இதற்கும் பயத்திற்கும்
இம்மியளவும் சம்பந்தம்
இல்லையே!

இது உனக்கான
இனம்புரியா மருந்து
உட்கொண்ட பிறகுதான்
உணருவாய் மாற்றங்களை.

காட்டில் நடத்தலாயினர்.

கரடுமுரடான பாதைகளையே
கண்டிராத மதியின்
பாதங்கள் பயணம் கொண்டது.

உதிர்ந்த இலைகள்
உயர்ந்த மரங்கள்
தூரத்தில் கேட்கும்
தண்ணீரின் சலசலப்பு
இடையிடையே கேட்கும்
இனம்புரியா இராகங்கள்.
கானகத்தின் மெளனம்
கலைக்கும் கானக்குயில்கள்
காதலியின் அனுமதியின்றி
காதலன் தொடும்போதும்
சுகம் மட்டுமே பெருகுவது போல்
சூரியக் கதிர்கள் மரம்
சூழ்ந்த காட்டினில்
வெளிச்சம் பரப்பி
வருடி விட்டது.

கல்லில் இடறினாள் - சிறிதே
காலில் குருதி சிந்தினாள்.
அழுதாள்.

பாதத்தை பிடித்தான்
பாசத்தோடு துடைத்தான்
சிறிதே அதில்
சகதி அள்ளி வைத்தான்
சரியாகிவிடும் என்றான்.

காய்ச்சல் வந்தாலே
கூச்சல் போடும்
காதலின் மனம்
கல்லாகிவிட்டதோ என
கணமொன்று எண்ணினாள்.

தேசம் கடந்து
திரவியம் தேடப் போகும்
மகனை தடுக்க முடியாமல்
மனதுக்குள்ளேயே அழுது
பிள்ளைக்கு ஆறுதலும்,
பக்தியோடு ஆசியும் தந்து
வழியனுப்பி வைக்கும்
வறியவன் போல்
அகத்திலே வேதனை மறைத்து
முகத்திலே முதிர்ச்சி காட்டினான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, November 5, 2008

காதல், கானகம் - பகுதி 26

பசி தீர்ந்த பின்னும்
பந்தியில் சோறு வைக்கும் பொழுது
மனதே நிறைந்து விட்டது
போதும் போதும் எனச் சொல்வதுபோல்
போதும் போதுமென்றாள்.
பித்தம் ஏறிய தலை போல்
சுற்றுகிறது.
பேசிப் பேசியே
சக்தி குறைந்து விடப் போகிறது.

பேசும் பொழுதோ
தொலைக்காட்சி பார்க்கும் பொழுதோ
எரியாத கலோரிகள்
தூங்கும் பொழுதுதான்
அதிகமாய் எரியும்
தெரியுமா உனக்கு?

எல்லாமே அறிவியல்தானா?
எதற்கும் ஒரு விளக்கம்தானா?

அறிவியல் என்பது வாழ்வு
ஏன் என்று கேட்பதனால்தான்
எண்ணற்ற பதில்கள் கிடைக்கின்றன.

இதோ இறங்கும் இடம்
இதற்குமேல் வாகனம் செல்லாது.
இயற்கை காணலாம் வா.

நிச்சயம் இறங்க வேண்டுமா?
நிசப்தமாக இருக்கும் இந்த
இடத்தை கண்டவுடனே
இனமறியா பயம் ஒட்டிக்கொள்கிறதே.

பயம் என்பது
பயனில்லாதது.
அப்படி ஒரு பொருளே
அவனியில் இல்லை.

இருள் பரப்பும்
கருவி எங்குமில்லை
ஒளியில்லாத இடம்
இருளாகிறது - அதுபோல்
தைரியம் மரிப்பதால்
தரிப்பதே பயம்.

பயம் யாதென்பதற்கு
பதிலளித்தீர்
அதைப் போக்க ஏதும்
அனுகுமுறை உண்டா?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, November 4, 2008

உயிர்த்தெழு ஒவ்வொருமுறையும்

கூட்டத்தின் காலடியில்
வீழ்ந்த மலராய்
கடலில் கலந்து
உப்பான நதிநீராய்
உன்னுள்ளம் முழுதாய்
காதலின் தோல்விதனில்
கரைந்து இறக்கும் தருணம்
பிறந்தெழு மீண்டும்
பிறிதொருமுறை காதலிக்க
ஆம்,
இங்கே காதலிக்கப்படவும்
இன்னும் காதலிப்பதற்கும்
இனிய உள்ளங்கள் உண்டு.

நட்பாய், அன்பாய்
ஆதரவாய், தாங்குதலாய்
திரிந்து பரவட்டுமுன்
உடைந்து போன காதல் மனம்.

காதல், கானகம் - பகுதி 25

இன்னமும் நிறைய
ஆராய்ச்சிகள் செய்யப் படவேண்டிய
அவசிய தளங்களில்
அலைகளும் ஒன்று.
இரும்புத் துண்டு
இந்த மின்காந்த அலைகளை
கவரவல்லது என்பதற்காகவும்
காலிலோ, கையிலோ வளையமாக இட்டிருக்கலாம்.

கவரவல்லது எனின்
அதை நாம் அணியக் கூடாது
அல்லவா?

உண்மை உள்ளேயிருப்பதை
உணர்.
இடிதாங்கியின் வேலைபோல்
இரும்பு வளையமும் வேலை செய்யலாம்.
காரணங்கள் இல்லாமல்
காலத்தோடு வரும்
பழக்கவழக்கங்கள் இருப்பதில்லை.
பதில் தேடுவதில்தான்
திறமை இருக்கின்றது.
தீமையுள்ள பழக்கங்களும்
இடையிடையே
இருக்கலாம்
அதையும் தெளிந்து
அகற்ற வேண்டும்.

ஆக பேய் இருக்கின்றதல்லவா?

நோயும்தான் இருக்கிறது
அதற்காக பயந்து
அகன்றிருந்தால் மருத்துவம் வந்திருக்குமா?
பேயும் நோய்தான்
பின்னொரு நாள்
அறிவியல் கூறப்போகும்
அறிய உண்மையும் இதுவே.

இப்பொழுது சொல்
இனி பேயைக் கண்டு அஞ்சுவாயா?

நான் நோயைக்
கண்டும் அஞ்சுபவள்
என இனமொழிதல் விடை கூறினாள்.

உங்களுக்கு அச்சமென்பதே இல்லையா?
நீங்கள் எதைக் கண்டாவது
அஞ்சுவீரா அத்தான்?

கேள்விக்கான விடையறிந்தும்
கேட்கின்றாய்.
கூறுகிறேன் கேள்.
உன்னை சந்திக்கும் வரை
உச்சந்தலை முதல்
உள்ளங்கால் வரை அச்சமில்லை.
உன்னைக் கண்ட பிறகுதான்
உண்மையில் அச்சம் கொள்பவனானேன்.

உன் கோப விழிகளால்
உற்றுப்பார்க்கும் போது
சுற்றம் எரியுமோவென அஞ்சுவேன்.

மலர் எடுத்து
தலையில் சூடும்போது
உனக்கு வலிக்குமோவென அஞ்சுவேன்.

நீ சிரிக்கும் பொழுது
வைரங்களாய் மின்னும் பற்கள் கண்டு
கப்பல் ஏதும் கரை ஒதுங்குமோவென அஞ்சுவேன்.

நீ நகம் வெட்டும்போது,
வெட்டுண்ட நகம் உன்னைப் பிரிந்த
கோபத்தில் சாபமிடுமோவென அஞ்சுவேன்.

நீ நடக்கும்போது
நிலத்தில் பட்டு உன்
கால் நோகுமோவென அஞ்சுவேன்.

நீ கடலில் கால்வைத்ததும்
கடல் நீர் குடிநீராகி அதனால் ஏற்படும் நீரோட்ட
மாற்றத்தால் நிலம் மூழ்குமோவென அஞ்சுவேன்


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, November 3, 2008

காதல், கானகம் - பகுதி 24

எரியும் கொள்ளியில்
எண்ணெய் ஊற்றியது போல்
பேய்ச்சுடர் பேய்த்தீ என
பீறிட்டது அவள் உள்ளத்தில்.

இதோ பார்,
நீ பேய் உண்டு என்பதை
நம்புவதால்தான் இக்கேள்வியைக் கேட்டாய்.
இருக்கிறதா இல்லையாவென
சந்தேகம் இருப்பின்
சாத்தானை எப்படி நம்புகிறாய்?

ஆம்,
நீ கடவுளைக்
காணவில்லை
ஆயினும் நம்பினாய்,
பேய், பூதத்தைக்
காணவில்லை
அதையும் நம்பினாய்.
முன்னோர்கள் வழியிலேயே
மூழ்கிப் போகிறாய்.

அறிவியல் கூறுவேன்
அறிய வேண்டுமா?

சொல்லுங்கள்.

ஒவ்வொருவரின் உடலிலும்
ஓரு மின்காந்த அலை இருக்கின்றது
சிலருக்கு சில மில்லிமீட்டர்
சிலருக்கு சில மீட்டர்.
அதுதான்
பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்,
பன்றியோடு சேர்ந்த கன்றும் மாறும்
என்ற
பழமொழியில் ஒளிந்திருக்கும்
புலப்படாத உண்மை.

புரியவில்லை
பேய்க்கும் இதற்கும்
என்ன சம்பந்தம்?
எல்லாம் இறுதியில் புரியும் கேள்.

மின்காந்த அலையின் அளவு
மாறிக் கொண்டே இருக்கும்,
வீரியமாய் நீ பேசும் பொழுது
விரிந்து நீளும்,
சுயம் மறந்து தூங்கும் பொழுது
சுருங்கி குறையும்.

உடல் இறந்தாலும் மின்காந்த
அலைகள் சிறிது காலம்
உலவும், பின் காற்றுடன்
கலந்து மறையும்.
அதனால்தான் சவத்தை
அக்னியில் சுடுவது
நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும்.

நீண்ட நாள் ஒரே இடத்தில்
நிலை கொண்டிருந்த தொலைக்காட்சிப்
பெட்டியை இடம்
பெயர்த்து மாற்றும்பொழுது
வர்ணங்கள் மாறுகிறதென்பதும்
மின்காந்த அலையால்தான்.

இந்த அலைகள்
எண்ணங்களை சுமந்து
செல்ல வல்லது,
நம்முடைய எண்ணங்களை
அலைகளாக்கி
அதை ஓட விட்டு
பிற மனிதனின் மூளையில்
பதியவிடலாம்.
இதுதான் புத்த மதத்தில்
இன்றும் இழையோடிக் கொண்டிருக்கிறது
இதுதான் பேயின் உண்மையும் கூட.

சிலருக்கு பேய் பிடித்ததும்
சிறிதும் தனக்கே தெரியாத
உண்மைகளை உளருவார்கள்
உதாரணம் இதற்கு ஏராளம்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal