என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Friday, October 31, 2008

காதல், கானகம் - பகுதி 23

திருடிய பொருளை
திருப்பி வைக்க எண்ணியவன்
மாட்டிக் கொண்டது போல்
மதியிழந்த முகம் காட்டிச் சொன்னாள்
மன்னித்துவிடுங்கள் என்னை.

நாடி பிடித்தான்
நெற்றி ஒட்டினான்
உருகி விழுபவளை
வாரி அணைத்து
ஒரு குவளையிலிட்டான்.
குவளையில் குதித்தான்
குறுத்த இடையினைப் பிடித்தான்.
மன்னிப்பெதற்கு கேட்டாய், உன்னை
மன்னிக்குமளவுக்கு நீ எனக்குத் தூரமில்லை.

காதலின் அணைப்பிலிருந்து
கைநழுவ எண்ணமில்லை,
களிநகை செய்தாள்
கண்கள் மூடி உதடுகள் திறந்தாள்
காதல் என்ற பெயர்
கச்சிதம் உங்களுக்கென்றாள்.

ஆதவளே!
ஆழமாய் நம்புவதே காதல்.
வா என்னோடு கானகம் செல்லலாம்.

செல்லலாம். நீங்கள் எங்கு
செல்லினும் நான் வருகிறேன்.

அடித் தங்கமே
அதிசயங்கள் காணுவோம் வா.

பயணம் தொடர்ந்தது,

சுறாவைக் கண்ட
சிறு மீனாய்
சூரியனைக் கண்ட
பனித்துளியாய்
வீட்டிலுள்ளோரைக் கண்ட
சுண்டெலியாய்
பரந்து கிடக்கும் மரங்கள்
பார்த்து இதயத்துக்குள்
ஆழக் குழிதோண்டி
அசைவின்றி மனதை
அழுத்தமாய் புதைத்துக் கொண்டாள்.

அடம் பிடித்து
அழும் குழந்தை
ஆளைக் கண்டதும்
அதிகமாக அழுவது போல்
காற்றில் அசையும்
மரங்களின் சத்தத்தில்
விசும்பி விசும்பி
பேய் என்று
புலம்பினாள்.

ஆயிரம் முறை முயற்சித்தும்
அடிபனியாத நாய்வால் போல்
பல பல சாமதானங்கள்
சொல்லியும் மனது
பேயென்னும் மாயையில் வீழ்ந்தது.

குருகிக் குருகி
ஆமைபோல் ஐந்தடக்கம்
ஆயினள்.

மெல்ல கண் திறந்து
மேனியெல்லாம் வியர்வையில் நனைய
பேய் என்பது உண்டா என்றாள்.

சின்னதாய் சிரித்து
சிறு பார்வை பார்த்து
ஆமாம் என்றான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 30, 2008

காதல், கானகம் - பகுதி 22

அடர்ந்த காட்டினிலிருந்து
என் உயிர் காத்தீர்,
கணவனென கையொப்பமிட்டீர்
கடலினும் ஆழமான உங்கள்
அன்பினால் என்னை மயக்கிவிட்டீர்.
யாரையோ மணக்கப் போவது நிச்சயம்,
யாரோ என்பவர் நீங்களாக இருக்கக்
கூடாதாவென கேட்டாய்.

உதவி என்பது பலனை
எதிர்பார்த்து செய்வதல்ல
உதவுவது என் குணம்,
உன்னிடமும் அவ்வாறேயென்றேன்.

நீங்கள் இதுவரை செய்த உதவிகளுக்கு
நீண்ட பலனாக இறைவன்
என்னை உங்களுக்குக் கொடுத்தானென
எண்ணிக் கொள்ளுங்களென்றாய்.

பதில் சொல்ல வந்த வார்த்தைகளை
பாதியிலேயே விழுங்கிவிட்டேன்.

பையிலுள்ள அலைபேசி அழைத்தது.

பார்த்தீர்களா நான் சொல்வது
பூராவும் உண்மையென
மணியோசை கேட்கிறது.

இது உன் கற்பனை
இதுதான் உண்மையென இப்பொழுது
புரிந்து விடும் பார்.

பெரிய புன்னகையோடு வந்த அம்மாவின் குரல்
பெண் கொடுக்க வந்திருக்கிறார்கள்,
இதுதான் விவரமென்றாள்.
இதில் சம்மதமா உனக்கென்றாள்

சற்றே குழம்பிப் போனேன்,
சிரித்த உன் முகம் கண்டேன்
கோடிக்குழப்பம் கொண்ட
பிரபஞ்சம் போன்ற உன் கண்கள் பார்த்தேன்.
ஒரு நொடி மூர்ச்சையானேன்
மரு வினாடியே தெளிந்தேன்.

சரியென்று சம்மதம் சொன்னேன்.
சாதகப் படி இரண்டாண்டிற்கு
பிறகுதான் மணமுடிக்க வேண்டுமென்றார்கள்.
போகட்டும் அதுவரை காதலிக்கிறேனென்றேன்.
முதன் முதலாய் எனக்குள்
முளைத்த வெட்கம் மறைக்க
எண்ணி, அது முடியாமல்
ஏமாந்தவனாய், சிறு புன்னகை செய்தேன்.

இப்படி
நான் செய்த சிறு உதவிக்கே என்மீது
நேசம் கொண்டாயே கண்ணே,
பூமியென்னும் உயிர் கொடுத்த தாயின்மீது
பாசமெப்படி மறந்தாய்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 29, 2008

காதல், கானகம் - பகுதி 21

உங்க மனசு யாருக்கும் வராது,
நீங்க எதுவும் தயங்காம சொல்லுங்க.

நேற்று இரவு
மருத்துவமனை சட்டத்திற்காக என்னிடம்
கையெழுத்து கேட்டார்கள் - நீங்கள் அவர்
கணவரா, சட்டென்று கையெழுத்திடுங்கள் என்று
வெள்ளை உடையில் வந்த தந்தி போல் ஒப்பித்தார்கள்
வழியேதும் தோன்றாமல்
கணவனென்று கையொப்பமிட்டு விட்டேன்
மன்னித்து விடுங்கள்.

பரவாயில்லைங்க,
பல நேரத்தில் இப்படித்தான்
நீங்க தாமதிச்சுருந்தீங்கன்னா என்னாயிருக்குமோ?
நீங்க வருத்தப்பட இதுல ஒன்னுமில்லை.

நான் சொன்ன வார்த்தை கேட்டு
நெஞ்சோரம் ஒரு புன்னகை செய்தாய்.

நீங்க செய்த உதவிக்கு
நாங்க ஏதாவது செய்யணும்.
கண்டிப்பா வீட்டுக்கு வாங்க - என்
கண்ணும், மனசும் குளிர உங்களுக்கு
எங்க வீட்ல விருந்து வைக்கணும்
என அன்புக் கட்டளையிட்டாள்.

ஒரு வாரம் கழித்து.
ஒருவரிடமும் சொல்லமலேயே
உன் வீடு வந்தேன்
என் வரவு சாதரணமாகவே இருக்கட்டுமென்று.

வாங்க, வாங்க
எப்படி இருக்கீங்க என்றாய்.
உனது பெற்றோர் எங்கே என்றேன்.
உங்கள் ஊருக்கு சென்றிருக்கிறார்களென்றாய்.
ஏன் என்றேன் - சொல்வதற்கு முன்
எனது கேள்விக்கு பதில் சொல்லுங்களென்றாய்.

எதுவும் புரியாதவனாய்
எது உனது கேள்வியென்றேன்.

எந்தன் வாழ்க்கைக்கு
நீங்கள் துணையாக இருக்க வேண்டும்
உங்கள் வீட்டில்
நான் விளக்கேற்ற வேண்டும் என்றாய்.

எதிர்பாரமல் வருவதுதான் காதல்
என கேள்விப் பட்டது
சத்தியமான உண்மையென உணர்ந்தேன்.
சில நாள் முன்புதான் பார்த்தோம்,
இன்னும் பழகவில்லை
இன்று கல்யாணம் என்கிறாயே என்றேன்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 28, 2008

பிரிவாற்றாமை

இந்தக் கவிதையை 2008 தீபாவளி மலரில் வெளியிட்ட சிஃபி இணையத்திற்கு நன்றிகள் பல.
http://tamil.sify.com/fullstory.php?id=14781596

அன்பே! என் உயிரினில் கலந்த உறவே!
அனுதினமும் விடியலும் இரவுமாய் நீயே!
தாய்க்கும் எனக்குமான உறவு தொப்புள்கொடி
தாரமே, உனக்கும் எனக்குமான உறவு தாலிக்கொடி.

தாயின் அண்மை அவசியமில்லாது போன
தருணம் முதன்முறை எனக்கு உன்னோடுதான்.
தந்தையின் வழிகாட்டல் அவசியமில்லாது போன
தருணம் முதன்முறை எனக்கு உன்னோடுதான்.

ஆம், நீ எனக்குத் தாய்தந்தையுமானவள்.
அங்ஙனமே என்னால் நீ தாயுமாகப் போகிறவள்.
கருவோடு நீ பெருவயிறோடு நிற்கையில்
நெருப்போடு நீ நிற்பதாகவே தவிக்கிறேன்.

தலைப்பிரசவம் பெண்ணுக்கு மறுபிறப்பாம்
தலைமகளாய் நீ வேண்டும் என்பதே என் விருப்பம்
தாயாகத் தாய்வீடு சென்று விட்டாய்.
தனியே இன்றிவனை விட்டு விட்டாய்.

படுக்கையில் நானே தொலைந்து போனேன்.
நடு இரவில் நட்சத்திரங்கள் எண்ணுகின்றேன்.
பெருவெள்ளத்தோடு போய்விட்ட சிறுகுடிலென
சிறுவுள்ளம் உடைந்து நினைவுகளில் மிதந்து நின்றேன்.

கண்ணயர்ந்தால் கனவில் வருவாயென்ற
நம்பிக்கையில் கண் மூடினேன் நான்,
கசிந்த கண்ணீர்த் துளியின் சூடு சொன்னது
பிரிவுத் துயர் பெரும் நெருப்பென்று!

காதல், கானகம் - பகுதி 20

மறுநாள் சரிசெய்யப்பட்ட உன்
மகிழ்வுந்துடன் வந்தேன்.
வாருங்கள் என்றார் தந்தை
யாருமில்லாத நேரத்தில்
பெரும் உதவி செய்தீர்.

உணவு எடுத்து வர கமலம்
வீடு சென்று இருக்கிறாள்,
நான் மருந்து வாங்கி வருகிறேன்
என் மகள் நினைவு திரும்பி இருக்கிறாள்
அவள் உங்களைப் பார்க்க வேண்டுமென்றாள்
அமர்ந்து பேசுங்கள், இதோ வந்துவிடுகிறேன்.

துவைத்து உலர வைத்த
துணி போல் இருந்தாய்
கடிதம் பிழையென
கசக்கி எறியப்பட்ட காதல் கடிதமாய்
துவண்டு கிடந்தாய்.
தூரம் நின்றேன்.

மெல்ல தலை அசைத்து
மெல்லியதாய் வாய் திறந்து
வாருங்கள் என்றாய்.

எப்படி இருக்கிறாய்
என்ற கேள்வியுடன்
வாங்கி வந்த பழங்களை
மேசையில் வைத்தேன்.

மழை முடிந்த வானமாய்
தூறலில் நனைந்த மலராய்
மெல்ல மலர்ந்து,
முகம் ஒளி பெற்றது.

நன்றி என்றாய்.
நேற்றே ஓராயிரம் முறை
உன் பெற்றோர்கள்
உரைத்து விட்டனர்.
உடம்பு தேறியிருக்காவென்றேன்.

இன்னும் இரண்டு நாளில்
இல்லம் போகலாம்
என்று சொன்னார்களென்றாய்.

மகிழ்ச்சியான செய்தி,
மனது ஆறுதல் அடைந்தேன்.

நன்றிப்பா
நான் வணங்கும் தெய்வம்போல்
வந்து அவளை காப்பாத்திட்ட.
இந்தக் கடனை என்ன செஞ்சு
தீர்க்கப் போகிறேனென உன்
தந்தை உள்ளே நுழைந்தார்.

மனிதம் எஞ்சியிருக்கிற
மனிதன் செய்யும் காரியம்தான்.
இத்தனை பாராட்டுகள்
அவசியமென்று தோன்றவில்லை.

மகிழ்வுந்து சரி செய்து
மருத்துவமனை வாசலில் நிறுத்தியிருக்கேன்.
இன்னொரு சேதி சொல்லணும் என்ற நேரம்
இடையே உன் தாயும் வந்தார்கள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]

Monday, October 27, 2008

சாளரம் தாண்டா கைகள்

உனது கைரேகையும்
எனது கைரேகையும்
ஒன்றாய்ப் படிந்த
கர்பப்பை அழிந்திருக்கிறது
கால வெள்ளத்தாலும்
கரை பிரிக்கும் கடலாலும்!

குருதியோடும் தசையோடும்
கலந்துவிட்ட உணர்வுகளும்
தொப்புள்கொடி உறவுகளும்
கலையவில்லை இன்னும்,
உனக்கொன்று நேரும்போது
கொதிக்கிறது எனது எண்ணம்!

தும்மினாலும் நீ விம்மினாலும்
எம்மையெட்டிவிடும் அச்சத்தம்
நொந்ததாலும் ஆங்கே
நின்விரல்கள் வெந்ததாலும்
உன்வீட்டில் பெரும் யுத்தம்
என்னெஞ்சினில் பல சத்தம்!

தெரிந்தும் தெரியாமலும்
நாமறிந்தும் அறியாமலும்
உடைத்துவிட்ட கண்ணாடிகள்
ஒட்டாமலின்னும் இருப்பினும்
ஓயாமல் அதில் தெரிகிறது
நம் பிம்பம்!

கண்ணாடிகளின் விரிசலில்
கச்சிதாமய்ப் படிந்திருக்கிறது
சில கிருமிகளும்
பலகால எச்சங்களாய்ப்
படிந்திருக்கும் தூசிகளும்
அதில் ஒளிந்திருக்கும் பாம்புகளும்!

உன்வீட்டு வாசல்தாண்டி
என்வீட்டு சாளரம்முன்
சிந்துகின்ற உனது குருதியில்
வெந்துமுடிக்காத உன்னிதயத்துண்டுகளும்
வந்தே விழுகின்றது
என்னால் அழமட்டுமே முடிகிறது!

நீ வென்றால்
நான் ஆர்ப்பரிப்பேன்
நீ தோற்றால்
நான் அழுதுறைவேன்
சூழ்நிலைக்காக மன்னிப்பாயென்
சாளரம் தாண்டா கைகளை!

காதல், கானகம் - பகுதி 19

காட்டுப் பாதையில் தன்னந்தனியாய்
காவலின்றி கிடந்தாய்,
விளக்கிடம் காதல் கொண்ட
ஈசல் போல் மகிழ்வுந்து
மரம் மோதிக் கிடந்தது.
அவ்வழியே வந்த நான்
அம்மனி உனக்கென்ன ஆயிற்றென்றேன்.
முழுநிலவு காய்ந்திருக்க
அமாவாசையாய் ஒளியிழந்த முகம் காட்டினாய்.
குருதி தோய்ந்த முகம், காலதேவனின்
குரூரத்திற்கு பலியாகும் தருவாயில் நீ.
சுவாசம் பார்த்தேன்,
சுமாராய்த்தான் வந்து கொண்டிருந்தது.
சட்டை கிழித்தேன், தோளில்
கட்டு போட்டேன்.
மருத்துவமனைக்கு விரைந்தேன்.

மருத்துவமனையின் அமைதி கெடுத்தேன்
மருத்துவம் தேவையென அலறினேன்.

என்னாயிற்று என்றார்கள்?

அவசர சிகிச்சை தேவை என
கூச்சலிட்டேன்.

நீங்கள் அவர் கணவர்தானே?
இதில் கையெழுத்திடுங்கள் என்றார்கள்.

கதை பேச இது தருணமல்ல என எண்ணி
கையொப்பமிட்டேன்.
எழுதிய கை இறங்கும் முன்னே
என்னாயிற்று, பிழைத்துவிடுவாளா என
கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டேன்.
தோளில் ஒரு பலத்த அடி என்ற பதில்
கேட்பதற்கே சங்கடமாய் இருந்தது.
உயிருக்கொன்றும் ஆபத்தில்லை என்ற பதில்
உள்ளே ஒரு நிம்மதியை விதைத்தது.

பையை துழாவினேன்,
பாவையுன் முகவரி கண்டேன்.
உண்மையுரைத்தேன்
உடனே வாருங்கள் இங்கென்றேன்.
உயிரைக் கையிலேந்தி,
உடலையும் பெரும்சுமையாய்க் கொண்டு
ஓடோடி வந்தார்கள்
உன் தாய், தந்தை.

என்னாயிற்று?
எப்படி இருக்கிறாள்?
நாங்கள் பார்க்கலாமா?
எங்கள் பிள்ளை எங்கே? என்று
மலையிருந்து உருண்ட
கல்போல மடமடவென
கேள்வி மேல் கேள்விகள்.

நீங்கள் பதறுவது போல்
நடக்கக் கூடாதது நிகழவில்லை.
உயிர் பிழைப்பது திண்ணம் என்று
உறுதி அளித்திருக்கிறார்கள்.

தோளில் ஒரு ஆழ வெட்டு,
கை, கால் சிராய்ப்பு, வேறொன்றுமில்லை.
மனது அமைதிகொள்ளுங்கள்,
மகளுக்கு ஆறுதாலாய் இருங்கள்.

சிறிதே சமாதானம் பிறந்தது
இருந்தும் புலம்பிக்கொண்டே
இருந்தது தாயுள்ளம்.

யாருக்கும் தீமையென்று
யாதும் செய்யவில்லையே.
இத்தகு தண்டனை
இவளுக்கு வேண்டுமோ இறைவா
என அமைதி அடையாத தாய் மனம்
எத்தனித்துக் கொண்டிருந்தது.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 24, 2008

காதல், கானகம் - பகுதி 18

கடல் முதல் உயிர் தரித்தது,
காற்றைத் திருப்பி பருவ மழை
பெய்ய மலை உதவியது.
காடு மானுடம் வளர்த்தது.

காடுகளின் சமாதிதான் நகரம்,
காடு சார்ந்தே நகர் அமைத்தான்
பின் காட்டைக் கொன்றான்.
வீட்டுக்கோர் மரம் வளர்த்தான்
வழிமாறி இன்று மரணம் வளர்க்கின்றான்.

நிமிர்ந்து பார்த்தாள்
நகரம்தான் சுகம் என்றாள்.
விலங்கு பயம் இல்லையென்றாள்,
வீதியெங்கும் மனிதன் என்றாள்.
இதில் எங்கே மரணம் வளர்க்கிறான்?

உனக்கு விஞ்ஞானம் மறந்ததோ?
உணர்த்துகிறேன் கேள்.
நாம் கண்ட விஞ்ஞானத்தில் ஏராளம்
நாசுக்காக ஓசோனை
ஓட்டையிட்டுக் கொண்டிருக்கிறது
ஒவ்வொரு நகரத்தின் அருகிலும்
ஒரு காடு வேண்டும்,
மரங்களின் கொலைகளால்
மாபெரும் பருவ மாற்றம் ஏற்படுகிறது.
பருவம் தவறிய மழையால்
பயிர்கள் ஆகிறது கொலை.
வரண்டு போன ஆறுகள் - அதிலும்
வஞ்சகம் இல்லாமல் தொழிற்சாலை
கலக்கும் கழிவுகள், இதனால்
கலப்படமானது குடிதண்ணீர்.
ஆழக் குழி தோண்டி
அடி வரை குழாய் இட்டு
நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகள், இதனால்
நீர்த்தடம் மாறி, நிலச்சரிவு ஏற்படும் அபாயங்கள்.

உலகமும், உயிர்களும் தானே பிறந்தவை - ஆனால்
உறுதியாய் அழியப் போவதென்னவோ மனிதனால்தான்!

நடப்பதன்று பார்த்துக் கொள்ளலாம்,
நமக்கொன்றும் நிச்சயம் நடக்காதென்று
ஏமாற்றம் கலந்த ஏளனச் சிரிப்பில் சொன்னாள்.

தவறாக பேசிவிட்டோமோவென்று
கருதி மன்னியுங்கள் எனக்
கூற வாயெடுத்தாள்.
பலனில்லை, புறப்பட்டு விட்டது
காதலின் வார்த்தைகள்.

பாவையே மறந்தாயோ மானுடத்தை?
பலர் பலன் பெற நட்ட மாமரம்
நட்டவருக்கு மட்டுமே பலன் தருவதில்லை,
நாளை என்பதை எண்ணாத
மனிதனால் நன்மை விளைவதில்லை
ஒறுமுறை நினைவு கூறுகிறேன் கேள்...


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 23, 2008

காதல், கானகம் - பகுதி 17

நான் கானகம் இரசிப்பவன்
மலைகளைப் புசிப்பவன்.
கானகம் நம் தாய்வீடு
கணக்கிலடங்கா உயிர்கள் வாழுமிடம்
நீயும், நானும் வாழ இடமிருக்காதா?

வார்த்தை வாழ்க்கைக்குதவாது
வனத்தில் புலி வந்தால்?
கரடி வந்தால்?

நீ சொல்வன எல்லாம்
நடுக் காட்டில்தான் இருக்கும்.
துள்ளி ஓடும் புள்ளி மான் காட்டுவேன்,
தோகை விரிக்கும் அழகுமயில் காட்டுவேன்,
பச்சோந்தி காட்டுவேன்,
பாசியில்லா ஓடை காட்டுவேன்.

அவசரம் வேண்டாம்,
அபாயம் என்று கத்தினால் கூட
காப்பாற்ற ஆள் இராது - பதிலுக்கு
கானகத்தின் மவுனமே மிஞ்சும்.

உனக்கு இது முதல் முறை
எனக்கு அங்கே நண்பர்களும் உண்டு.
அவர்கள் உடன் வருவார்கள்
அச்சமென்ற சொல் தெரியாதவர்கள்.
மலைகளிலும், காடுகளிலும்தான் அவர்கள் தொழில்
மலைத்தேன் கொணர்ந்து தருவார்கள். வா.

நீங்கள் காட்டுவாசி.

இல்லை, நான் காட்டிற்கு காவலன்
ஐ.ஃப்.ஸ் அதிகாரி.
மேலும் காடுகளில் ஆராய்ச்சி செய்பவன்.
வருடம் முழுதும் இருந்தாலும்
வியப்பாய்த்தான் பார்க்கின்றேன்
கானகத்தை, ஆயிரமாயிரம் விசயங்கள்
கற்றுக்கொள்ள இருக்கின்றது!

என்னை மணந்தபின்
உன் வீடு காடுதான்.
காய்கனிகள்தான் உணவு
காட்டில் சுத்தமான காற்றும் சுவாசிக்கலாம்.

வீட்டிலேயே இருப்பேன் நான்
விடிந்ததும் போய்,
இருட்டுமுன் வந்துவிடுங்கள்
இல்லறம் வீட்டிலேயே நடத்துவோம்.
கண்ணைக் கட்டுகிறது,
காதலனாய் காட்டின் காவலன்.
காதலியாய் நான்!

ஓடும் வழியில்
ஓனாயைக் கண்ட
செம்மறி ஆட்டைப் போல்
சிலாகிப்பவளே

காடு
ஒலியின் மவுனம்,
ஒளியின் நிழல்,
பெரும் அறிவின் பிம்பம் - புத்தனின்
போதிமரம் கூட காட்டில்தான் இருக்கின்றது.

இயற்கையின் மிகுதிகள்
காடு, கடல், மலை.
கடல் தாய்,
மலை தகப்பன்,
காடுதான் மானுடம் என்ற மைந்தன்.
இவைதான் வாழ்வின் ஆதாரம்.

மெல்ல முகம் திருப்பி
வலக்கண் நீரைத் துடைத்து
காந்தள் இதழ் மலர்ந்து
எப்படி? என்றாள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 22, 2008

காதல், கானகம் - பகுதி 16

சமாதானம் வேண்டாம்,
சட்டென மகிழ்வுந்தை நிறுத்துங்கள்.
எனக்கு அழுகையே வருகிறது.

வாகனம் நிறுத்தினான்,
வாரியணைத்தான் அவளை.
மெல்ல என்னைப் பார் என்றான்.

மவுனம் மட்டுமே திருப்பிக் கொடுத்தாள்.

அவள் கூந்தல் கோதினான்.
அடர்ந்த விழிகளால் பார்த்தாள்.

தண்ணீரில் தான்
மீன்கள் வாழுமென்பதை
கண்ணீரில் மிதக்கும்
உன் கண்கள் சொல்லுதடி.
அடியே கார்மேகக் கூந்தல்காரி
அவனியில் கானகம்தான் நம் முதல் வீடு.
கருங்கூந்தல் காடு கொண்டவளே
காடு கண்டா அஞ்சுகிறாய்?

புறா போல் தலை திருப்பினாள்
புறமுதுகு காட்டினாள்.
உங்களோடு சண்டை என்றாள்
ஊடல் கூட்டினாள்.

தோள் பிடித்தான்
தேகம் திருப்ப எண்ணினான்.

அவளுக்கு
சமாதானத்தின் சுகம் பிடித்தது
சடுகுடு ஆடியது மனது.

திருப்ப முடியாமல் தோற்று
முதுகில் முகம் புதைத்தான்.
மெல்லியதோர் மூச்சு விட்டான்.

உனது முதுகு போன்ற
உன்னத பளிங்குகள் காணலாம்,
அகன்ற உன் கூந்தல் போன்ற
அடர்ந்த கானகம் காணலாம்,
மலையில் அருவி காணலாம்,
மலை முகடுகள் ஏறலாம்,
பசிக்கு பழங்கள் உண்ணலாம்.
பள்ளங்கள் தாவலாம்,
ஆடைகள் கூட
அவசியமில்லாத இருள் காணலாம்,
சுதந்திரம் வாசிக்கலாம்.

தனிமையிலே நான் இருந்ததில்லை
ருதுவானதும் இட்ட இரும்பு வளையத்தை
இன்னும் களையவில்லை.
தனிமை பயம் எனக்கு,
அடர்ந்த காடு பயம் எனக்கு.
அவன் மடி புகுந்தாள்.

கன்னம் தடவினான்
காது மடல் நீவினான்
மூக்கில் மூக்குரசினான்
மேல் நெற்றியில் முத்தமிட்டான்
செவ்விதழ் சீண்டினான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 21, 2008

காதல், கானகம் - பகுதி 15

ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு மொழி,
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு தலைவன்,
ஒவ்வொரு கூட்டத்திற்கும் ஒரு கோட்பாடு.
அஃதே தோன்றியது முதல் மதம்.

மருத்துவம் மலரச் செய்தான்
மாபெரும் ஆராய்ச்சி செய்தான்,
வானம் பார்த்தான்
வானவியல் பயின்றான்,
கணிதம் இயற்றினான்
வணிகம் செய்தான்.

பிள்ளைக்கு விலங்கு
பயம் காட்டி உணவளித்தான்,
கனத்த ஆராய்ச்சிகளை
கதை கதையாய் சொன்னான் - இவைகளை
பின்பற்றச் சொன்னான், நம்பாதோர்க்கு
பிசாசு, பூதம் என பயம் காட்டினான்.
நெல் அறுவடை செய்தான்,
நாகரீகம் வளர்த்தான்.
போர் செய்து நிலங்களை கூட்டினான்
பண்பாடு கண்டான்.

போதும், போதும்
பிரளயம் கண்டது போலானாது
என பிரம்மித்தாள் ஆதவள்.

பூங்கா செல்லலாம் என்று
பாதை மாறிச் செல்கிறீர்கள்,
நாம் எங்கே செல்கிறோம்? - இல்லை
நீங்கள் எங்கே அழைத்துப் போகிறீர்கள்?

பொறு, பொறு
புலம்பாதே!
நாம் பூங்கா கடந்து
நாற்பது நிமிடம் ஆயிற்று.
கானகம் செல்கின்றோம்.

வேண்டாம்.
வீட்டிற்கே சென்றுவிடலாம்
என்றவளது கண்களில்
இருண்ட கானகத்தின் பயம் தெரிந்தது.

பூகம்பம் உணர்ந்த பாம்பைப்போல் ஏன்
பயப்படுகிறாய். நானிருக்கிறேன், அஞ்சாதே!

இரண்டு வாரத்தில் திருமணம்
இப்படிச் செல்வது நல்லதல்ல.
அது ஆள் அற்ற காடு
அங்கே பேய் இருப்பதாக
பலர் கூறி கேட்டிருக்கிறேன்
பயந்து சிவந்தது அவள் முகம்.

பேயா?
பேயென்னும் மூட மாயை
உன்னையும் தொற்றிக் கொண்டதா?
உண்மையைக் கூறுகிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, October 20, 2008

காதல், கானகம் - பகுதி 14

ஆசிரியரின் கேள்விக்கு விடையறிந்த
மாணவன் போல்
முகம் மலர்ந்து சொன்னாள்.
அது எனக்கே தெரியும்.
ஆண்டவனால் உருவாக்கப்பட்டது.

கேளடி என் கண்மனி,
காது தீட்டிக் கேள்.

மனித இனம் முளைத்தது
மனிதக் குரங்கிலிருந்துதான்.

பதினைந்து இலட்சம் வருடத்திற்கு முன்புதான்
சிம்பன்ஸியிடமிருந்து மனிதன் பிரிந்திருக்கிறான்.
மிகப் பழைய தற்கால மனிதனின்
மண்டை ஓடு ஆதாரத்துடன் சிக்கியது சுமார்
இரண்டு இலட்சம் வருடத்திற்கும் முன்பானது.

பெண் என்பவள் கருசுமப்பதால்
பெரும்பாலும் பாதுகாப்பாகவே இருக்கிறாள்.
ஆண்தான் வேட்டையாடி
உணவு கொணர்ந்து வருவான்.
மனிதனின் முதல் கண்டுபிடிப்பு
முனைப்பான கருவிகள்தாம்.
கற்களை வைத்தே
கருவிகள் செய்தான்.
மிருகம் கொன்றான், பச்சை
மாமிசம் உண்டான்.

அவனுடைய அடுத்த கண்டுபிடிப்பு
அளவிடற்கறியாத ஒன்று.
ஆம், நெருப்பு.
காட்டுத்தீ கண்டு பயந்தவன்,
கற்களில் தீ கண்டு மகிழ்ந்தான்.
சுட்டுத் தின்றான்,
சமையல் அறிந்தான்.

கூட்டமானான்,
குகைகளில் வீடு கொண்டான்.
விலங்கிலிருந்தும், மற்ற மனிதனிடத்தும் தற்காத்து
வாழ்ந்துகொள்ள சண்டையிட்டான்.
திசைகள் அறிந்தான்
தலைவன் ஒருவன் உருவானான்.

பேச ஒரு மொழி கொண்டான்,
படங்களாக எழுத்துக்கள் கண்டான்.
சிந்தித்தான்,
பேசினான்,
தர்க்கம் செய்தான்,
சண்டையிட்டான்,
முடிவு கண்டான்,
சட்டம் செய்தான்,
மீறியவனை கொன்றான்,
காடு கடத்தினான்.

குளிர் கொண்டான்,
காப்பாற்றிக் கொள்ள
விலங்குத் தோலுறித்து ஆடை கொண்டான்,
வினோதம் துவக்கினான்.

ஒருத்தியிடமே உறவென்றான்
மற்றவர்கள் அவளைத் தொடக் கூடாதென்றான்.
இல்லறம் கண்டான்,

என் மனைவி,
என் மக்கள்
என் இடம்,
என் சமுதாயம் என்றான்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்]

Friday, October 17, 2008

காதல், கானகம் - பகுதி 13

ம்...ம்...
சொல்லுங்கள், எந்தக் களை கண்டீர்?

ஒரு குழந்தை போல் நீ.
ஓயாமல் ஒரு விஷயத்தை கேட்கின்றாய்
விடை தெரியும் வரை,
வினா உன்னுடையதென்றால்.

சொல்கிறேன் கேள்.
அறிந்த சான்றோர்கள் கூறும்
அளவிடதற்கரிய அறிவுரைகள் ஏராளம்.
இதனிடையே மூடர்கள் சொன்னதும்
இடைச் செறுகல்களாய் வளர்ந்தது.

உதாரணம் உரைக்கின்றேன் கேள்.
உடன்கட்டை ஏறுதல்,
பெண்களுக்கு உரிமை வழங்க மறுத்தல்,
பெண்னை கற்புடையவள் எனக்காட்ட முதலிரவுக்குப் பின்
குருதி படிந்த வெள்ளைச் சீலையை
குடிமக்கள் காண உலர்த்துதல்,

இன்னும் ஏராளம்....

கடவுள் பெயரால் பலமக்களை
கழுவில் ஏற்றினார்கள்.
பெறுதற்கறிய மருத்துவக் குறிப்பை
ஆற்றில் விட்டார்கள்,
சாதி பிரித்தார்கள் - சில சாதியினரை
சவம் போல் மதித்தார்கள்.

கேட்கவே குரூரமாய் இருக்கின்றது அத்தான்.
கேடு கொண்ட சாதி எதற்குப் பிறந்தது?

சாதி கேடு கொண்டதல்ல,
சந்தர்ப்ப வாதிகளால் மாறியதுதான் கேடு.

மந்திரம் ஓத ஒரு சாதி,
மயிர் மழிக்கும் தொழிலுக்கு ஒரு சாதி,
வணிகம் செய்ய ஒரு சாதி,
வன்கடல் சென்று மீன் பிடிக்க ஒரு சாதி,
மறப் போர் செய்ய ஒரு சாதி,
மரவேலை செய்ய ஒரு சாதி,
இரும்படிக்க ஒரு சாதி,
பெரும் பணம் கடன் கொடுக்க ஒரு சாதி,
குடியாள ஒரு சாதி,
காடு காக்க ஒரு சாதி,
துணி வெளுக்க ஒரு சாதி,
ஆடற்கலை வளர்க்க ஒரு சாதி
இப்படி இன்னும் எத்தனையோ சாதிகள்.

இத்தனை சாதிப் பிரிவுகள் ஏன் என
ஈடுபாட்டோடு கேட்டாள்

தொழில் ஒவ்வொன்றும்
தலைமுறை தலைமுறையாகச்
செய்தால், கலை வளரும்,
செவ்வனே காரியங்கள் முடியும்.
காலப் போக்கில் அதற்கான
காரணங்கள் மறந்து,
இழி தொழிலைச் செய்வோன்
இவன் என சில தொழில் செய்வோரை
வசைமொழி பாடினார்கள்
வாழும் முறை மறந்தார்கள்.
கடவுள் பெயரைச் சொல்லி
காமுகர்கள் கற்பைச் சூறையாடினார்கள்.
மதமென்னும் அன்பு மொழியில்,
மதமேறி நஞ்சு கலந்தார்கள்.
நல்லாட்சி செய்ய சாதி பிறந்தது - இப்போது
ஆட்சி பிடிக்கவே சாதிகள் வளர்க்கப் படுகிறது.

மதங்கள் எப்படி வந்தது
என்று சொல்கிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 16, 2008

மரணம் களைந்து எறிகிறேன்

அசைவுகள் ஏதுமற்ற
இடங்களில் படர்ந்திடும்
சிலந்தியின் வலையொத்திருக்கிறது
உணர்வுகள் யாவுமற்ற
என் முகத்தினில்
வளர்ந்திருக்கும் தாடி

அந்த முடிக்கூட்டில்
மறைந்துவிடும் முகபாவனைகளில்
மறையாமலிருப்பது ஒன்றுதான்,
கிழித்தெறியப்பட்ட காதல்.

காதல் சின்னங்களால்
கலையாய் இருந்த அலமாரி
சற்றே தூசுகளோடு
சலசலப்பின்றி இருந்தது,
சாளரத்திலிருந்து வந்த
வெளிச்சத்தில் பளபளத்தது
நாட்குறிப்பேடும் கடைசி
நிமிடத்தில் கோழையாகி
தூக்கியெறியப்பட்ட
தூக்குக் கயிறும்.

கண்களை வைத்தே
என்னையுணர்ந்து
அரவணைக்கும் பெற்றோர்களின்
அன்பினில் கொஞ்சமாக
துளிர்க்கிறது தொலைத்த அன்பு.

காதலியால் தூரப்பட்ட
நண்பர்களின் இன்றைய அருகாமையில்
பூக்கத் துவங்குகிறது
புன்னகை, தாடிப் புதரிலிருந்து.

ஏழு மாத தாடி
மழிக்கப் போகிறேன்
எனக்கான இடமொன்று
ஏதோவொரு மனதிலிருக்கும்வரை
மரணம் களைந்து எறிகிறேன்.
ஆம்,
மரணம் தோல்வியின் தீர்வல்ல.

காதல், கானகம் - பகுதி 12

வாருங்கள் அத்தை, நீங்களும்
உண்ணுங்கள் என்றாள்.

நீங்கள் உண்ட பிறகு
நானுண்பேன்.
வீடு திரும்பும் நேரம் எப்பொழுதோ!
வயிறாற சாப்பிடுங்கள்.

அத்தான், இந்த பழக்கம் எதனால்
அரும்பியதென்று தெரியுமா உங்களுக்கு?

தெரியும் ஆதவளே!
தெளிவிக்கிறேன் கேள்.
சமையலைச் சுவையாய் செய்வதைவிட,
சமயமறிந்து இடுவதிலும் சிறப்பு இருக்கிறது.
கொடுப்பது பழைய கஞ்சியானாலும்,
கூட எது சேர்த்தால் சுவையென்று கணக்கிருக்கிறது.
முதலில் எதை உண்ன வேண்டும்,
எவையில் எவை சேர வேண்டுமென்பது கலை.
அவைகள் கலையை
அறிந்தவர்களுக்கே தெரியும்.

என்னே வியப்பு!
எண்ணிக்கையில்லாத சம்பிரதாயங்கள்
வியந்தாள் ஆதவள்!

ஆம்.
அறிவில் சிறந்த பல
கருத்துக்களை கூறியிருக்கிறார்கள் - ஆனாலும்
காரணமறிந்து செய்வதே சிறப்பு.
அழகிய நெல் வயலான சம்பிரதாயங்களிடையே
ஆங்காங்கே களைகளும் இருக்கும்.

என்ன களைகண்டீர்?
எதுவும் இருப்பதாக தெரியவில்லையே!

கை கழுவு,
காலாற நடப்போம்.
போகின்ற வழியில்
போதியவற்றை சொல்கின்றேன்.

மகிழ்வுந்து எடுத்துப்போ!
மழை பொழியுமாறு இருக்கிறது.
மெதுவாகச் செல்,
தெருவிளக்குகள் எரியுமுன் வந்துவிடு
என்றார் நாகய்யன்.

ஆகட்டும் தந்தையே.
அப்படியே செய்கிறேன்.

எங்கு வரை செல்கிறாய்
என்றாள் மலர்.

அருகிலுள்ள பூங்காவிற்கு என்று
கண் மறைத்துப் பதில் சொன்னான் காதல்.

மகிழ்வுந்து முன் கதவு திறந்து
மெல்லியவளை அமரச் செய்தான்.
புறப்பட ஆயத்தமானான்.

பாதுகாப்புப் பட்டையை அனிந்து கொள்ளுங்கள்,
பதைத்தான் நாகய்யன்.

பக்குவமாய் சென்று,
பத்திரமாய் திரும்புங்கள்,
பாசமுரைத்தாள் மலர்.

களிமுகம் செய்தான்,
கன்னியிடம், செல்லலாமா? என்றான்.
மகிழ்ச்சி வெள்ளத்தில், புன்சிரிப்போடு
ம்...ம்.... என்றாள்.
புறப்பட்டது மகிழ்வுந்து!


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 15, 2008

காதல், கானகம் - பகுதி 11

அவர் உண்ணாத அன்னம்
எனக்கெதற்கு? - அவர்
உண்டதைக் கண்ட பிறகே
உணவைத் தொடுவேன்.

அடி கொடியே,
நீ சொல்வது பழைய பாடம்.
நீண்ட கடல் கடந்து
வணிகம் செய்யப் போனேனாயின்
வரும் வரை உண்ணாமல் இருப்பாயா?
பேதையே வறியவற்கு உணவளிக்க வேண்டும்,
பசிக்கும் வயிற்றிற்கும் உணவளிக்க வேண்டும்.
எந்தக் கணவன் மனைவி வரும் வரை
எதையுமுண்ணாமல் இருந்திருக்கிறான்?

போதும் நீங்கள் சொல்வது.
பழங்கதைகள் காட்டுவதும், என் தாயின்
பழக்கங்களும் மடமை என்கிறீர்களா?

பைங்கிளியே கேள்.
கிளிதான் சொன்னதையேச் சொல்லும்,
உன் தாய் சொன்னாலும் மடமை
உண்மையாகி விடாது.
மின்சாரம் இல்லாத அந்தக் காலத்தில்
காடு சென்றாலும் மாலைக்குள்
வீடு வந்துவிடுவர் ஆடவர்கள்.

இன்றைய நிலை வேறு.
காலத்திற்கேற்ப கருவிகள் மாறும்.
காட்சிகள் மாறும் - இன்றைய வாழ்க்கைகேற்ப
முரணான கூற்றுகளும் மாறும்.
மாற்றங்கள் ஒன்றே மாறாதது, உணர்ந்து கொள்.

உனக்குப் பசியெடுப்பின் நீதான்
உண்ண வேண்டும், என் பசிக்கு நான்!
ஒரு குவளை சோறுதான் இருக்கிறதென்றால்
"மானுண்டெஞ்சிய கழலி நீர்" போல் உண்ண வேண்டும்.

ஒத்துக்கொள்கிறேன்.
காதெட்டா தூரம் நீங்கள் சென்றால்
கருத்தோடு உங்கள் சொல்படி நடக்கிறேன் - ஆனால்
நிழல் தொடும் தூரத்தில்
நீங்கள் இருக்க, நான் மட்டும் பசியாறவா?
உணவு உண்ணும் வேளையில்
ஊடல் இருந்தாலும் மறப்போம்.
சிறு சண்டையிட்டுப் பிரிந்தாலும்
சோறு உண்ணும் வேளையில்
தேடல் கொள்வோம்.
கடல் கடந்து இருந்தாலும்,
சிறிதே தும்மலிடச் செய்வோம்!

அழகான பாடம்
அரும்பினாய்.
ஆழமான கருத்துக்கள்.
கற்றுக் கொடுப்பவருக்கும் கற்றுக் கொள்ள
கடலளவு இருக்கிறதென்று சுட்டினாய்.
வா அன்னமே, அன்னம் உண்போம்.

உணவு பரிமாறிவிட்டு,
உண்ணுங்கள் என்று கூறி
அருகிலேயே நின்று கொண்டாள்,
அன்னை, மலர்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 14, 2008

காதல், கானகம் - பகுதி 10

கல்வி என்பது
முடிவிலாதது,
கற்பதற்காக நேரத்தை
விற்பதில்தான் இருக்கிறது
வியாபாரம்.

உலகம் காண செல்கின்றோம்,
வீட்டு சன்னல் வழியாக இவள்
வாசித்த வாழ்க்கையை,
வாழ்வின் வாசலுக்கு கொண்டு சென்று
அறிவுபெற
அழைத்துச் செல்கிறேன்.

மாங்கனி போல சுவையாய் பேசும் என்
மருமகளுக்கு மதி குறைவு என்கிறாயா?
வந்தாலே வீட்டை ஒளிரச் செய்பவளுக்கு
வாழ்க்கையைக் காட்டப் போகிறாயா?

மதி என்ற பெயரையே
மாற்றச் சொல்லிவிட்டார்
உங்கள் மகன்.
இனி மற்றது பேசி எதற்கு?

சரி, ஆகட்டும்.
ஆகாரம் உண்டு
பிறகு செல் என்றார்.

செவிக்கும் கண்ணுக்கும் உணவு தேடிச்
சென்று கொண்டிருக்கிறோம்.
வயிற்றுக்கு உணவு
வேண்டுமெனில் வந்துவிடுகிறோம்
வீட்டிற்கு என்றான் காதல்.

மதி, நீ
சாப்பிட்டு விட்டுப்போம்மா.
அவன் பசி பொறுப்பான்,
அகிலமே உணவென்பான்,
மழை நனைவான்,
வெயில் சுமப்பான்,
உலகே குடையென்பான்.

வீட்டிற்கு வந்த உன்னை
வெறும் வயிற்றோடு அனுப்ப மாட்டேன்.
அன்னம் பருகிக் கொள், பின்
அனைத்தும் தெரிந்து கொள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, October 13, 2008

காதல், கானகம் - பகுதி 9

ஊர்காண எங்கள் திருமணமானதும்
உங்கள் கடன் முடிந்தது.
உணவுப் பந்தி முடிந்ததும்
உறவினர்கள் பணி முடிந்தது.
அன்றுதான் எங்கள் பணி
ஆரம்பம் ஆகிறது.

இதில்
பயணிக்கத் தெரியாததில்
பாதி பேர்
வாழ்க்கையை
இரத்து செய்கிறார்கள்
மீதி பேர்
இன்பங்களை
இரத்து செய்கிறார்கள்.

கால் கடுக்க நடக்கப் போகும்
கரடுமுரடான வாழ்க்கைக்கு
காலணிகள் வாங்கச் செல்கின்றோம்.

காலமென்னும ஆழி
கடக்க படகென்னும்
அனுபவம் வேண்டும்
அதற்கான மரம்
தேடச்செல்கின்றோம்.

அனுபவம் நீ கடக்கும்
ஆண்டு பொருத்து அமைவது.
ஒரே நாளில்
அனைத்து அறிவும் பெறுவது
அணுவளவும் நடக்காது
என அனுபவத்தில்
எடுத்துரைத்தார் நாகய்யன்.

அனுபவம் என்பது
அளவிட முடியாத தீ அல்ல,
அது ஒரு சுடர்.

புத்தனுக்கு
போதி மரத்தில் வந்தது
விவேகானந்தனுக்கு
பரமஹம்சரிடம் வந்தது.

உண்மை, நியாயம் என்பது
உள்ளத்தில் நமக்கிருக்கும்
அளவு கோல் பொருத்தது.
அது சரியானதாதுதான்
என எண்ணுவதுதான்
எளிதில் கிடைக்கும் தீர்வு - ஆனால்
சரியான அளவுகோலைத் தேடிச்
செல்வதுதான் சிறப்பு.

பிடிவாதம் என்பதையே
பழக்கமாகக் கொண்டிருக்கிறாய்.

ஏன், எதற்கு என
கேள்வி கேட்பதற்கும்
இடம், பொருள், ஏவல்
இருக்கிறது.

நில்லென உன்னைத்
தடுக்கவில்லை,
நீ அறியாதது அல்ல,
இனியும் என்ன அறியப் போகிறாய்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 10, 2008

காதல், கானகம் - பகுதி 8

முட்டைக்குள் இருந்து
முழி.

உலகமென்பது
உனது
வீடு ஒன்றே என்பதை
விட்டொழி.

கடல் காண்
காடு காண்
நாடு காண்
நாட்டு மக்கள் காண்

ஜனகனமன... என்பது
தேசிய கீதம்.
முயற்சி, அனுபவம் என்பது
மானுட கீதம்.

பயணத்திற்கு
புறப்படு என்னோடு.

கோமாவிலிருந்து
கண் விழித்தது போன்ற
உணர்வு, இன்னும்
உலகம் என்ன என்பதை
முழுதாய் அறியாததாய் தோன்றும்
முதல் அறிவு.

குச்சி வைத்து நடக்கும்
குருடர்கள் போல்
அவன்
கைப்பிடித்து
கால்கள் நகர்த்தினாள்.

நில்லப்பா,
இரண்டு வாரத்தில் திருமணம்.
இருவரும் எங்கே செல்கிறீர்கள்?
திருமண காரியங்கள்
ஏராளமாய் இருக்கிறது.
பத்திரிகை கொடுத்தது
பாதி பேருக்குத்தான்
மீதி வேலை
மிச்சமிருக்கு.
என்றார் தந்தை நாகய்யன்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 9, 2008

காதல், கானகம் - பகுதி 7

சரி வா கிளம்பலாம்.

எங்கே கூப்பிடுகிறீர்கள்?
எந்த இடம் எனக்கு
இந்த சொர்க்கத்தை விட
இன்பமாக இருக்கப் போகிறது?

தோளில் தலை சாய்த்து
கரங்களில் கரம் கோர்த்து,
மரத்தில் படர்ந்த
கொடி போல இருக்கும்
கொடி(இடை)யவளே.
வா, நீ கண்டும் காணாமல் விட்டதை
வடிகட்டி காண்பிக்கிறேன்.

இன்னும் கொஞ்ச நேரம்
இருந்துவிட்டுப் போகலாமே!

முட்டைகள்
கோழியின் சூட்டில்
பத்திரமாய் இருப்பது
போன்ற உணர்வு
பித்தாக்கி இருந்தது அவளை.

இத்தனை நாள்
இருந்தது போல்
இனியும் உன்னை
அடைகாத்து வைத்திருக்கப்
போவதில்லை நான்.

நீ வெளிவரும்
நேரம் வந்துவிட்டது.
பெண்கள் பருந்துகள் - ஆனால்
பறக்கத் தெரியாத
பெங்குயின்களாய்
மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

அனுபவமென்னும்
இறக்கைகளையும்
பறப்பதற்காய்
பயன்படுத்தத் தவறியவர்கள்.

எனது அனுபவத்திலிருந்து
இரண்டு இறக்கைகள்
உனக்காய்த் தருகிறேன் - அது
உன்னுடையதல்ல.
ஆனால் அது காட்டும்
அறிவில் வானம் ஏறலாம்
உலகின் விளிம்புகள் காணலாம்.

உனக்கான
இறக்கைகள்
இறக்குமதியாகும் வரை
முட்டிப் போராடு
முழு நீள வாழ்க்கைக்கு
அனுபவம் ஒன்றுதான்
அவசியம்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 8, 2008

காதல், கானகம் - பகுதி 6

முத்தம் சில வோல்ட்டுகளை
மூளைக்கு அனுப்புகிறது
அதன் விளைவாக
அதிகமாக சுரக்கிறது
எச்சில் திரவம், இதனால் வாயின்
எல்லாப் பகுதியும் சுத்தமாகிறது.

முத்தம் கொடுப்பதால்
முகத்தில் முப்பத்து நான்கு
தசைகளுக்கும் மேல்
இயங்குகிறது.
முகம் முழுக்க
ஏற்படும் இறுக்கம் தளர்ந்து
மூப்பு குறைகிறது.

ஒரு கிலோ எடை
குறைக்க ஆராயிரத்துக்கும்
மேற்பட்ட கலோரிகள்
எரிக்க வேண்டும்.
ஆனால்
பதினைந்து நிமிட
முத்தம் மொத்தம்
முப்பது கலோரிகள்
எரிக்கின்றது.

முத்தத்தினால்
இரத்த ஓட்டம்
அதிகரிக்கிறது
அது மாரடைப்பையும்
தவிர்க்கிறது.

இப்பொழுது சொல்
நமது இளமை கூட்டி
மாரடைப்பைத் தடுக்கும்
முத்தத்தை ஏன்
முடித்தாய்?

முத்தத்தில் இவ்வளவு
சத்தான விஷயங்கள்
இருக்குமென்று தெரியாததால்.
இருப்பினும் இன்றைக்கு
இதுபோதும்!

கேடுகளும் இருக்கிறது
கேட்கிறாயா?

சொல்லுங்கள்.

உதட்டோடு
உதடு சேர்த்து
கொடுக்கும் முத்தத்தினால்
எச்சில் வழியே
சிற்சில நோய்க்
கிருமிகளும் பரவும்.
தெளிந்தாயா?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Tuesday, October 7, 2008

வாழ்வு சிறக்கட்டுமெங்கும்!

ஒரு தலைவன் பொங்கி எழும்பொழுது... இது ஒரு பாடலாய்...

கண்கள் தீப்பிடிக்க
கைகள் வாள்பிடிக்க
கொடுமை அழித்துவிடு வீரா
எங்கள் குறைதீர்க்க
ஏழை நலம் பெருக்க
எதிரிகளை வேரரறுக்க வாடா

எழுவாய் இடி இடிக்க
நடப்பாய் வெடி வெடிக்க
உன் சத்தம் பிளக்கட்டும் வானை

எதிரிகள் தொடை நடுங்க
அவர்கள் படை ஒடுங்க
இந்த யுத்தம் முடியட்டும் நாளை

மக்கள் பலமுண்டு
அவர்கள் அன்புண்டு
தொடர்ந்திடு உன் போரை
நித்தம் உணவுண்டு
நல்ல உடையுண்டு
விடிந்திடுமே நம் வாழ்க்கை

நிற்பாய் நிலம் அதிர
வெல்வாய் வான் ஒளிர
உன் வெற்றி ஒலிக்கட்டுமெங்கும்

ஆணை இடுவாய் விடிய
கொள்கை எடுப்பாய் அடைய
நம் வாழ்வு சிறக்கட்டுமெங்கும்!

காதல், கானகம் - பகுதி 5

காதல் என்றாலே
கற்பனை ஊற்று
பொங்கி விடுகிறது உங்களுக்கு.

உண்மை.
காதலின்றி எது இயங்கும்?
சூரியனின் மேல்
சூழ்ந்திருக்கும் காதலால்தான்
கிரகங்கள் சுற்றுகின்றன.
உலகின் மீது
நிலா கொண்ட காதலால்தான்
நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.
தேன் மீதுள்ள
வண்டின் காதலால்தான்
மகரந்தச் சேர்க்கை.

அறிவியல் சொன்னால்
நியூட்ரான் மீது
ப்ரோட்டானும்
எலக்ட்ரானும்
கொண்ட காதல்தான்
அணு.

காதல் என்பது
உண்மையில்
உடம்பில் ஏற்படும்
இரசாயன மாற்றம்.

எல்லாமே
இரசாயன மாற்றம்தானா?
ஏன் இவ்வளவு
தெரிந்து வைத்திருக்கிறீர்கள்?
பொய்யாக கடிந்து கொண்டாள்.

அருகில் வந்தாள்
அணைத்தாள்
கன்னத்தில் சிறிது நேரம் உதடொட்டி
கனிமுத்தம் கொடுத்தாள் பின்
தோள்களில் சாய்ந்துகொண்டாள்.

அதற்குள் ஏன்
நிறுத்திவிட்டாய்?
கண்ணே!
கணக்கிலடங்கா
பரிசுப் பொருட்களெல்லாம்
பெரிதல்ல ஒரு
முத்தத்தை கொடுக்கும்பொழுது.

அப்பாடா,
அறிவியல் விட்டு
வெளிவந்தீர்களா!

இல்லை
அறிவியல் தான்
வாழ்க்கை.
வாழ்க்கையை விட்டுவிட்டு
வாழ்வதெப்படி?

நீ கொடுத்த
அன்பு முத்தத்தின்
அறிவியல் அறிவாயா?
சொல்கிறேன் கேள்.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Monday, October 6, 2008

காதல், கானகம் - பகுதி 4

ஆதிக்கு துணையில்லை
அது பெருகிப் பிரியும்,
பிரிந்து பெருகும்,
புணர்ந்து மாறும்,
மாறிப் புணரும்.

புரியவில்லை,
பெருகியது என்றால், ஒன்றிலிருந்து
எங்கனம் இத்தனை உயிர்கள் வந்தது?

சொல்கிறேன் கேள்.
பத்தில் ஐந்து கழிந்தால், மீதம் ஐந்து.
ஆனால் ஏழு கழிந்தால் மீதம் மூன்று.
இது போன்று கழிந்தும், பின்
புணர்ந்தும், பிரிந்தும், பெருகியும்
விளைந்ததுதான் உயிர்கள்.
புரிந்ததா?

புரிவது போல் இருந்தாலும்,
புரியாதது போலும் தோன்றுகிறது.
அறிவியலை உங்களோடு நிறுத்துங்கள்,
ஆண்டவன் என்று கூறினால்தான்
எனக்கு சட்டென்று புரியும்.

பேதையே,
நீ கூறும் கடவுளின் உட்பொருள்தான்
நான் கூறும் துளிகள்.

..ம்.....ம் போதும், போதும் - என்னைக்
காதலிக்க ஆரம்பித்தப் பிறகு
காதல் என்று நீங்கள்
பெயர்மாற்றிக் கொண்டது போல்,
மதியை ஆதவள் என
மாற்றிக் கொள்கிறேன், போதுமா?

ஆம். அதுதான் சரி,
திருமணம் என்பது
தித்திக்கும் புதுவாழ்வு.
புதுப்பெயர் சூட்டிக் கொள்வதில்
புதிர் என்ன இருக்கிறது?

காதல், காதல் என்று எத்தனையோ
காவியங்கள் வந்தும், காதலென்ற
பெயரை அவனியில் யாருமே வைத்ததில்லை.
நீங்கள்தான் வைத்திருக்கிறீர்கள்.

அதில் ஒரு சிறப்பு கேள்,
காதல் எனும் வார்த்தை
களம் கண்டு மாறுபடும் - ஆனால்
உணர்வு வழியே ஒன்றுபடும்.
பெற்றோர் பிள்ளையிடம் பேசுவதும் அதுவே,
சகோதரத்துவத்தில் சிறப்பதும் அதுவே,
நட்பிலே நனைவதும் அதுவே,
மணத்தில் மனப்பதும் அதுவே.


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Friday, October 3, 2008

காதல், கானகம் - பகுதி 3

காலைச் சூரியனின்
குவளை வெளிச்சத்திலும்
வெளிச்சம் பரவாத அறையின்
வாயில் திறந்தான்.

செவ்வான மேகம் போல
செவ்விதழில் கோபம்.
இளஞ்சூரியனின் வெப்பமொத்து
இசைப்பது போலவே கேட்டாள்
"இவ்வளவு நேரம் ஏன்?".

அடியேய்,
மதி நீ இல்லாமல் போனதால்,
மதியின்றிப் போனேன்.
சாவித் துவராம்
வழியே வந்த உன் மதி கொண்டுதான்
வாயில் திறக்க வந்தேன்.

காதல், காதல் என்று கூப்பிட்டது
காதில் விழவில்லையா?

இன்னும் சற்று நேரம் நீ கூப்பிடுவாயென்று
எண்ணியே சிலையாய் இருந்தேன்.

ஆரம்பித்து விட்டீர்கள்!
என்று கூறி உள்ளே வந்தவள்,
நீங்கள் பித்து பிடித்து போயிருக்கிறீர்கள்,
மதி அழைப்பதும் புரியாத வண்ணம்
மயக்கத்திலேயே இருக்கிறீர்கள் என்றாள்.

மதி என்று உனக்கு யாரடி
பெயர் வைத்தது?

பெண், சூரியன்.
பல காலமாய் வந்தாலும்
ஒவ்வொரு வருகையும்
ஒரு வரம்தானடி.
பெண்ணே
நீ பேசும் பொழுது
இளஞ் சூரியன்,
கோபம் கொண்டால்
பக்கச் சூரியன்,
காதல் கொண்டால்
மாலைச் சூரியன்.

ஆண்
பூமி போன்றவன்.
பெண் இருக்கும் இடத்தில்
அன்பு வெளிச்சத்தில்,
தழைத்து வாழ்கின்றான்.
தான் பெறும்
வெற்றியிலும், தோல்வியிலும்
பின்னாலும், முன்னாலும்
பெண்ணை வைத்துக் கொள்கிறான்

மேலும் கேள்,
சூரியனிலிருந்து பிறந்ததுதான் பூமி
பூமியிலிருந்து பிரிந்ததுதான் நிலா

சிறிது நிறுத்துங்கள். அப்படியானால்
சூரியனின் துணைவன் யார்?


(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Thursday, October 2, 2008

அண்ணலே நீக்குவாய் இன்னலே

மீண்டும் உயிர்ப்பாய்
மக்கள் உள்ளத்திலே
அகிம்சை அறிவிப்பாய்
ஆங்கே அவர்களிடம்!

சாதிக்கும் மதத்திற்கும்
பேருக்கும் புகழுக்கும்
சண்டையிடும் ஈனர்களுக்கு
சத்தியத்தைப் புகட்டுவாய்!

கைத்தொழிலுக்கு ஆதரவாய்
கதராடை தரித்தாய்
குண்டூசி முதல் கோபுரம்வரை
முதலாளித்துவம் மட்டுமிங்கே மீதம்!

நோட்டுகள் தவறாமல்
நீ சிரிக்கிறாய் - கள்ள
நோட்டுகளிலும் தவறாமல்
நீ சிறக்கிறாய்!

சனநாயகம் விதைத்தாய்
சுதந்திரமும் கொடுத்தாயன்று
ஓட்டுப் போடுமிடத்தில்
உருட்டுக்கட்டை வீசுகின்றனரின்று

மீண்டும் உயிர்ப்பாய்
மக்கள் உள்ளத்திலே
அகிம்சை அறிவிப்பாய்
ஆங்கே அவர்களிடம்!

காதல், கானகம் - பகுதி 2

அப்பொழுதுதான் தியானத்தில்
அவன் அமர்ந்தான்;
கதவு தட்டும்
காதலி சத்தத்தில்
கண் விழித்தான்.

வந்துவிட்டாள் என் காதல் தேவதை,
வழியெல்லாம் வர்ணம் பொழிந்து.
வீட்டு வாசலின் ரங்கோலிக் கோலம்
வீதி கடந்து போயிருக்கும், இவள்
வர்ணம் கண்டு!

என்ன செய்கின்றாய்?
எனும் செல்லக் கோபமும்,
கதவைத் திற எனும்
காந்தக் கட்டளையும்,
"நான் மதி வந்திருக்கேன்" எனும்
நாதம் கேட்டும்,
சிலையாகவே இருந்தான்.

நிலவின் மறுமொழி
மதி அவள் பெயர்.
அவள் ஒரு
அன்னம்.
மாநிறத்தில் மின்னும்
22 காரட் தங்கம்.
பேச்சிலே
பழக்கத்திலே
ஒரு குழந்தை.
காதலிக்கிறேன் என்பதை
கண்ணியமாக உரைத்தவள்.
தூறலாய் அன்பு பொழியும்
தேவதைகளில் ஒருத்தி.
மண்ணில் காதல் செய்த
புண்ணியங்களின்
ஒட்டுமொத்தப் பலன்.

பசும்பாலின் தூய்மை அவளது
பளிங்கு மேனி,
குடிபெயரும் அவளது
குவிந்தவாய் வார்த்தைகள்
குளிர் வாடைக் காற்று.
அவள்
பல நேரம் அவன் சேய்
சில நேரம் அவன் தாய்
இப்போதைக்கு அவனது
இரண்டு வருடக் காதலி,
இன்னும்
இரண்டு வாரத்தில் மனைவி.

(தொடரும்...)

முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

Wednesday, October 1, 2008

காதல், கானகம் - பகுதி 1

என் அன்பிற்கினிய நண்பர்களே, ஏறத்தாழ இந்தக் கவிதையை எழுதி 7 மாதங்கள் தாண்டிவிட்டன. ஒரு முழு நீளக் கவிதையாய் இதை அளித்த அன்று பகுதி பகுதியாக இட்டால் வாசிப்பது எளிது என்று பலர் கருத்துக் கூறினர். அதன் பொருட்டு அன்று எழுதிய அந்தக் கவிதையை எந்த மாறுபாடுமின்றி, சில எழுத்துப் பிழைகளை மட்டுமே திருத்தி அனுப்புகிறேன். இது மொத்தத்தில் 46 பகுதிகளாக வெளிவரும். தினமும் ஒன்று வீதம் மொத்தம் 46 நாட்களில் முடிந்துவிடும். இதில் சனி, ஞாயிறு, வேறு ஏதேனும் அவசர நிலை தவிர்த்து இதர நாட்களில் தொடரும். ஏற்கனவே எழுதி வைத்து விட்டதால், இதில் இடையூறு ஏதுமிருக்காது என நம்புகிறேன்.

இதில் எழுத்துப் பிழைகள், ஒரு கருத்து முன்னரும் பின்னரும் முரண்படுவது போல எழுதியிருந்தால் தயவு கூர்ந்து தெரியப் படுத்துங்கள். நன்றி.

காதல், கானகம் - பகுதி 1

காதல்.....காதல்.....
கதவு வழியே வரும்
அழைப்பு ஓசை....

காட்டை ஆளும்
கலியுகத்து இராமன்.
பொது அறிவுகளில்
புதைந்தவன்.
தரணியில் தனக்கென
தனி உலகம் கொண்டவன்.
காடுகளை
கடுமையாக நேசிப்பவன்.
மானுடம் மறந்தவர்களை
மனிதத்தோடு விமர்சிப்பவன்.
மனிதர்களையும்
மிருகங்களையும்
ஒருங்கே நேசிப்பவன்.
அன்பு என்பதின்
அடைமொழி இவன்.

பிறப்பதறியாமல் பிறந்து
பிணம்தின்னிக் கழுகளாய்
பணம் ஈட்டி
பின்னொரு நாளில் இறக்கும்
பாவி மனிதனாய் வாழ்வதிலென்ன பயன்?
என்றெண்ணுபவன்.

சந்ததியினருக்கு
சொத்து சேர்க்காதவன்
ஆதரவற்ற குழந்தைகளுக்கும்
அனாதையாக்கப் பட்ட
சில பெற்றோர்களுக்கும்
சில காலமாக
இவன் ஒரு தாய்.
"இனிய இல்லம்"
இத்தகு சொர்க்கத்திற்கு
இவன் தந்தையிட்ட பெயர்.

குழந்தை பிறந்ததும்
அழுவது பிள்ளையாகத்தான்
இருக்கவேண்டும்
வேறு யாராகவும் இருக்கக் கூடாது.
ஒருவன் இறக்கும் பொழுது
அழுவது சமுதாயமாக இருக்க வேண்டும்
அவனாக இருக்கக்கூடாது.

இவன் இறந்தால்
கண்ணீர் வடிக்க
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
அதுவே அவன் சொத்து.

அறிவுமதி
அவனது உண்மைப் பெயர்.
காதலி மதி மீது
கொண்ட காதலால்
காதல் என
பெயர் மாற்றிக் கொண்டவன்.

(தொடரும்....)

அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal