என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Wednesday, July 30, 2008

விளக்கமறியா விளக்கங்கள்

பூவென்று நம்பி கையிலெடுத்ததில்
வண்டொன்றும் பூநாகமும்
தோன்றிச் சண்டையிட்டுக் கொண்டன!
வெள்ளை ரோஜாவிதழ்
மெல்ல மெல்ல சிவப்பாகின
நாளமுடைத்த குருதியினால்!

வழிந்த குருதியில்
புரிந்தது அதன்
வெப்பமும், வேட்கையும்.
தேனருந்த வந்த உங்களுக்கு
தேவையா இதுவென்றேன்.

வீசியெறிந்த அம்புகளை
திரும்பப் பெறமுடியாது
தன்னிலை விளக்கத்துக்குத் தாவின,
மீண்டும் அம்புகள் குமிந்தன!

அம்பு மழை முடிந்த பின்னர்
அமைதியானது இடம்
ரோஜா இதழில் மட்டும்
குருதி சிந்திய தடம்

என்றாவது அம்போடு
நானிருக்கையில் அன்போடு
எனைத் தடுக்க
வண்டும் பூநாகமும்
வருமென்ற நம்பிக்கையோடு நான்!

Tuesday, July 29, 2008

வாடி நிற்கிறது மலர்

நீண்ட நாட்களின்
மௌனத்தை முறித்து
வண்டமராத ரோஜாவை
செடியிலிருந்து பிரித்து
செல்வந்தனின் சேமிப்பாய்ச்
சேர்த்து வைத்தக் காதலோடு
காதலின் கணவாயில்
புன்னகையோடு காத்திருந்தேன்
காதலியின் கனவோடு
உதறலைக் களைந்திருந்தேன்.

வந்தவள் நின்றனள்
முடியாது என்றனள்
வேறொருவரைத் தேடென்றனள்...

செடியோடு சேரமுடியாத
பிரிந்த ரோஜாவாய் நான்.

Friday, July 25, 2008

மனிதம் கொல்லும் மனிதர்களே

பெங்களூரில் நடக்கும் கொடுமைகளுக்கு கொதிக்கும் மனதில் ஆறுதலுக்கு வழியின்றி....

மீளட்டும் இந்த பாரதம் படுகொலைகளிலிருந்து.

என் கோபம், என் கண்ணீர், என் பாசம், என் மகிழ்ச்சி எல்லாம் கவிதைதான். என் மொழி கவிதை.

-------------------------------------------------------

வெட்டினால் வளர்வதற்கு
இது மயிரல்லவே, உயிர்!
காசுக்காக குண்டு வைக்கும்
கயவர்களே!
உயிரின் விலையறியா மூடர்களே!

உன்னால் போன
உயிர் ஒன்றினைக் கூடத்
திருப்பித் தரமுடியா
தீயவனே!
உனக்குமொரு கேடா உயிர்?

கனவுகளும்
கடமைகளும்
குறிக்கோளும்
அன்பும்
அரவணைப்பும்
ஆற்றப் பெற்ற
மனிதனின் மூளையை
அழிவுக்கே பயன்படுத்தும்
அற்பப் பதர்களே
அறியீரோ குருதி சிந்தும்
அகோரக் குரலை!

கார்த்திகை தீபம்

நட்சத்திரங்களைத் தெருவெங்கும்
நட்டு வைத்தாற்போல தீபம்,
வானத்து தேவதைகளின்
வளமான ஆபரணமென
மின்னும் ஒளிச்சுடர்,
தீபத்தின் மெல்லிய வெளிச்சத்தில்
தேவதைகளாய் மாறிய நங்கைகள்,
காதுத் தோடுகளும் மூக்குத்திகளும்
கலங்கரை விளக்கமாக மாறி
கட்டிளங் காளைகளை
கப்பலாய் கரை ஒதுக்கும்,
இரவிலும் தெரியும் வானவில்லாய்
தெருவாசல் கோலங்கள்,
அகல்விளக்கு ஒவ்வொன்றாய்
அணையத் துடிக்கும் வேளையிலே
கரத்தால் அணைகட்டியே
காத்திடும் உணர்ச்சிகள் வெள்ளந்தி,
இனிப்புகளாக பண்டங்களும்
இல்லங்களும் நிறையும் தேன்சிந்தி!

Thursday, July 24, 2008

பட்டம் பறக்கிறது

மொட்டை மாடியில்
சுளீரென அடிக்கும் வெயிலில்
சற்றே கிடைத்த நிழலில்
நின்று கொண்டு
நான் பட்டம் விடுவதைப்
பார்த்துக் கொண்டிருக்கிறாய்

காற்றில் அங்குமிங்கும்
காட்சிதரும் பட்டத்தை
இரசித்த படியே நீ!

நீ வருவாயென்றே இதயம்
படம் போட்ட
பட்டத்தை வாங்கினேன் நான்!

படிச்சுப் பட்டம் வாங்குவான்னு
பார்த்தா, அடிக்குற வெயில்ல
பட்டம் விடுறானே இவனென என் தாய்!

வானவில்லாய் வந்து போகிறாய்

செப்புச் சாமானில் நீ
சமைத்துக் கொடுத்த
மிளகாய்த் தூள் குழம்பு ருசி
எந்தக் குழம்பிலும் வந்ததில்லை

குச்சி ஐஸ்சிலும்
சவ்வு மிட்டாயிலும்
சிவந்த நாக்கு
மாறவில்லை இன்றும்

எனக்காகவே நீ
பாவாடையோரத்தில்
ஒளித்து எடுத்து வரும்
கடலை மிட்டாய் சுகம்

ஆற்று மணலில் விளையாட்டும்
அந்தி வேளைப் பொழுதில்
திண்ணையில் கதையும் பேசிய
தருணங்கள் மனதிலேயே இருக்கிறது

பள்ளிக் கூடத்தின் சைக்கிள்
பயணத்தில், என் முதுகில்
எழுதிக் காட்டிய
எழுத்துக்கள் எனது ஆயுள்ரேகைகள்

நிழலாய் என்னுடன்
நீ இருந்த பொழுதின்
பெருமைகள் புலப்படுவதென்னவோ
வானவில்லாய் நீ வந்துபோகும்
இந்தப் பொழுதில்தான்.

சமைந்துவிட்டாயாமே?
சத்தியமாய்ப் புரியவில்லையெனக்கு!

- ஒளியவன்

Tuesday, July 22, 2008

தற்கொலை

கண்கள் அகலத்திறந்திருந்தும்
காட்சிகள் புலப்படவில்லை
புலிக் கூண்டுக்குள்
பசியோடு நானும் புலியும்
போராடுவது போலொரு உணர்வு
இறுதியில் மடியப் போவது
உறுதியாக நானென்ற எண்ணத்திலேயே
உடைந்து சிதறுகிறது நம்பிக்கை.

உலகமென்ன
வாழ்வென்ன
சொந்தமென்ன
பந்தமென்ன
யாரும் எனக்கில்லை
யாருக்கும் நான் தேவையில்லை

பள்ளமும் பாம்புகளும் நிறைந்த
பாதையிலே ஒற்றை வெளிச்சமுமின்றி
செல்வது போலதான் என்வாழ்வு
அடுத்த நிமிடம்
கேட்கப் படும் கேள்விகளுக்கு
பதிலெங்கே இருக்கிறது
பாவியென தூற்றப்படுவதற்கு முன்
என்ன செய்யலாம்?

"இனியும் நீ உயிர்வாழ்ந்து
என்ன செய்யப் போகிறாய்?"
கணீர் குரல் வந்தது
குரல்வளை வழியாக அது வரவில்லை.

ஆம்,
தற்கொலை!
இதுதான் ஒரே வழி.

என் வாழ்வின் முடிவே
இன்னதுதானா?
தற்கொலைக்கு அடுத்த
தருணம் பூமியிலே
நானில்லை...
தேவையா இது?

"பயந்தால் புண்ணியமில்லை
பேதையே, துணிந்து தூக்கிடு"
மிரட்டியது அந்தக் குரல்.

நான் கோழையல்ல
நிச்சயம் தூக்குதான் ஒரே வழி.
கயிறு இல்லையே?
உயிர் போக்க எதுவழி?
புடவை இருக்குமே, அம்மாவின்
புடவை.

"இன்னுமென்ன தயக்கம்
இறுக்கிக்கொள் கழுத்தை, குதித்துவிடு"
அழைத்தது அதே குரல்.

காலடியில் இருக்கும்
கட்டையைத் தட்டிவிடவா?
கண்ணீர் கரைபுரண்டோடுகிறதே
எனக்குப் பிடித்த பல
விசயங்கள் கண்முன் வருதே
ஆனால் அவமானத்திலிருந்து
அவைகளெதும் காப்பாற்றப் போவதில்லை.

காசு கொடுத்தது வீணாய்க்
கரைகிறது என்றாய்
எருமை, கழுதை
எதுக்கு நீயெல்லாம்
இருக்கிறாயென்றாய்
இரொண்டொரு முறை
எங்கேயாவது போய்த்தொலையென்றாய்
என்னைப் பெற்றதற்கு
எருமையைப் பெற்றிருக்கலாமென்றாய்
படிக்காமல் விளையாண்ட
போதெல்லாம் அதட்டினாய்
அப்பாவிடம் சொல்லி
அடிவாங்கித் தந்தாய்.

தேர்வில் தேர்ச்சியடையவில்லை நான்
தொலைந்தேன் இன்று உங்களிடம்.
இனி உனக்கு தொந்தரவில்லை
இதோ தட்டப் போகிறேன் கட்டையை.
.
.
.
.
.

"அய்யோ....
அய்யோ....
எம்புள்ள
எம்புள்ள
என்ன செய்வேன்,
இப்படி செஞ்சுபுட்டானே பாவிமகன்"
பரிதவித்தாள் தாய்.

"நான் பாஸாகலம்மா,
நீ எப்படியும் அடிப்ப,
நான் போறேன்"
முற்றுப் புள்ளி வைக்காமல்
முற்றுப் பெற்றுவிட்ட
கடிதத்தின் முற்றுப்புள்ளியானது
கண்ணீர்.

[படிப்பென்பது அவசியம்தான், ஆனால் கட்டாயமல்ல. குழந்தைகளை அளவான எதிர்பார்ப்போடே வளருங்கள். பின்னர் அழாதீர்கள்]

Monday, July 21, 2008

சில தலைப்புகள்

வசப்படு
~~^o^0^o^~~
துவண்டு கிடக்கும் மனமே!
தூறி முடித்த வானம்
குழந்தையின் சிரிப்பு
காற்றோடு வரும் பூவாசம்
இவற்றுக்காவது
இசைந்து நீ வசப்படு.

மீதமாய் இருக்கிறாய்
~~^o^0^o^~~
உனக்குமெனக்குமான
ஊடலில் கழிந்து விட்ட
ஊணப்பட்ட இரவுகள்
முழுதும் தீர்ந்துவிடாத
மீதமாய் இருக்கிறாய்.

தழல் ததும்பும் கோப்பை
~~^o^0^o^~~
தழல் ததும்பும் கோப்பையென
தகித்துப் போனதென் மனது
ஏனோ என்னைவிட
எவனோ ஒருவனை நீ
உயிர்த் தோழனென்றபோது.

ஐம்புலன்
~~^o^0^o^~~
ஐம்புலனின் ஆளுமையும்
உனதருகாமையில் இழக்கிறேன்.

அழகுக் குறிப்பு
~~^o^0^o^~~
அழகுக் குறிப்புகளின்
அனிவகுப்புகளாக
பூத்திருக்கிறது என்
பூந்தோட்டம்.

நான் அவன் இல்லை

ஊறுகாய், கருவாடோடு
ஊரிலிருந்து வந்திறங்கினான்
உயர்பள்ளித் தோழன்.

"எங்க ஆத்தா, அய்யன்
உங்க அப்பனாத்தா
நம்ம ஆளுக அல்லாரும்
நீ நல்லா இருக்கியானு
நலம் விசாரிக்க சொன்னாக.

காலேசுல படிச்சு
வேலை கிடச்சு பட்டனம்
போனப் பொறவு ஊரு
பக்கம் ரெண்டு வருசம் வரலியப்பா

உனக்குப் புடிக்குமேனு
உங்க ஆத்தா
அதிரசமும் முறுக்கும்
ஆம வடையும் செஞ்சு
என்கிட்ட கொடுத்துவிட்டுருக்குடா"
என்றான் வெகுளித்தனமாக.

முக்கால் நீள கால்சட்டையோடும்
முடியில் ஆங்காங்கே
வண்ணத்தோடும்
வழிந்தோடும் எச்சில் போல்
உதட்டுக்குக் கீழே குறுந்தாடியோடும்
உண்மை அடையாளம் துறந்து
நாகரீகத்தின் வளர்ச்சியில்
நன்றாக மாறிப்போன நான்; அவனிடம்
"ஓ ஷிட், அப்படியா" என்றேன்.

"சார், நீங்க ஆர்டர்
செஞ்ச பிட்சா,
சிக்கன் பர்கர்" என்று
கதவு தட்டினான் பிட்சா
கார்னர் பையன்.

Saturday, July 19, 2008

நான் என்பதும் நீதான்

கானல் நீராகிப் போன
கணங்களோடு என் வாழ்வு
காயப்பட்டுவிட்ட மனதில்
களையப் படாமலிருப்பதுன் நினைவு
சிறகு முளைத்து
சீறிப் பறக்கும் வேளையிலே
ஒற்றைச் சிறகோடு
முற்றுப் பெற்றதென் பயணங்களே

தோட்டத்தின் மலர்கள்
தினம் தினம் பூத்திடும்
வாசம் மட்டும் உள்ளே
வராமல் எங்கோ போய்விடும்
காலைக் காப்பி முதல்
காட்சியெங்கும் நீயடி
மனைவியே நீ இறந்தபிறகும்
மண்ணிலென் வாழ்க்கை வீணடி

மீதமெதும் இல்லாமல் காலம்
மெல்ல அழித்திடுமோ நம் உறவினை
மிஞ்சிப்போனால் அது வென்றிடலாம்
மிச்சமின்றி அழித்தாலென் உயிரினை
இரண்டாம் திருமணத்தை
இதயம் நாடியதில்லை இது மெய்தான்
காமத்தைத் தாண்டிய நம்
காதலில் நான் என்பதும் நீதான்.

Thursday, July 17, 2008

நானும் எனது கணினியும்

எப்பொழுதுமே முறைத்துவிட்டு
எக்குத்தப்பாகவே இருக்கும்
எனது எதிர்வீட்டுக் காரந்தான்
இணையதளத்தில் வேறுபெயரில் என்னுடைய
நீண்டநாள் நண்பன் என்பது
தெரியாமலேயே தொடர்ந்தது நட்பு.

உண்மையிலேயே ஒரு கிராமமென
உலகம் கணினியில் சுருங்கினாலும்
உலகம் தெரியாமல்தான் போகிறது.

போதைப் பழக்கத்தைவிட
பெரிய பழக்கமாகிவிட்டது என் கணினி.

அணு ஒப்பந்தம், ஆட்சி மாற்றம்

அருகிலிருந்தவர்
அணு ஒப்பந்தம் பற்றியும்
ஆட்சி மாற்றம் பற்றியும்
பக்கம் பக்கமாகப்
பேசிக் கொண்டிருந்தபொழுது
கவனத்தை ஈர்த்தது
கனத்த குரலொன்று.

பரபரப்பான பேருந்து நிலையத்தில்
பார்ப்பவர்கள் இடமெல்லாம்
தண்ணீர் வேண்டுமா
தண்ணீர் வேண்டுமாவென்றுக்
கூவிக் கூவி விற்றபடி
பாவி ஏழைச் சிறுவன்
பசிக்காக உழைத்தான்.

கல்வியென்ற ஒன்றை
கண்டிருப்பானா இவன்?
அணு ஒப்பந்தமும்
ஆட்சி மாற்றமும்
பற்றிய எந்தக் கவலையும்
மாற்றிடுமா இவன் வாழ்வை?

புறப்பட்ட பேருந்து மெதுவாக
பேருந்து நிலையத்தைவிட்டு
வெளியேறிய பொழுதும்
விழியகற்றாது பார்த்துக்
கொண்டே இருந்தேன் அவனை
கண்கள் அயர்ந்து
தண்ணீர் தாகத்தில்
தொண்டை வறண்டு
மயக்கமுற்று விழுந்தான் என்
மண்ணின் மைந்தன்.

Monday, July 14, 2008

இரவின் பிடியில்

இருட்டி விடத் தொடங்கிவிட்ட
இந்த ஞாயிற்றுக் கிழமையின் இரவு
திங்கட்கிழமையின் அலுவல்களின்
தொடர்ச்சியாகத் தொடங்குகிறது.

கணினி என் கைக்குள் இருந்தாலும்
கணினியின் பிடியில்தான் நான்,
பதினேழு அங்குல திரையில்
பக்கம் பக்கமாய் வேலைகள்.

விடிந்தால் தொடர்ந்துவிடும்
வேலைகளின் முடிவில்
இருட்டிவிடும் இரவோடு
இன்றியமையாததாய் அடுத்தநாள் வேலை.

வார இறுதியில் கணினியைவிட்டு
வெளியே உலகைத் தேடினும்
மாலைப் பொழுதின் தொடக்கத்தில்
முடிந்து போன ஒருநாளின் வருத்தம் மட்டுமே!

ஏதோ ஒரு இனம்புரியாத
ஏக்கத்தில் குறைந்து கொண்டிருக்கும்
இன்றைய இரவின் தூக்கத்தோடு குறைந்து
இருக்கிறது நாளைய வேலைக்கான சுறுசுறுப்புகள்.

நித்தம் உணவும், பாதுகாப்பும்
நிறைந்திருந்தும் வெறுமை பூண்ட
உயிரியல் பூங்காவின் விலங்குகளுக்கும்
உண்மையில் எனக்கும் வித்தியாசமில்லை.

Friday, July 11, 2008

மூன்று விரல்கள்

நண்பர்களின் தவறை
நேரம்தவறாமல் சுட்டிக்
காட்டிவிடும் எனது
கண்டிப்பான ஆள்காட்டி
விரல் திடீரென்று
குரல் எழுப்பியது.

"துலாவின் தன்மையோடு
துல்லியமாய் கட்டைவிரலும்
குற்றச்சாட்டுகளை சுமந்து
கொண்டு நிற்கும்
ஆள்காட்டி விரல் நானும்
அன்றி மீதம்
அனைத்துமே
உன்னை ஆராய
உன்னையே பார்த்து
நிற்கின்றதின் உண்மை
நிலை அறிவாயா?" என்றது.

யார் நீ?
யாவும் அறிந்தது போல்
என்னுள் இருந்து
என்னையே கேள்வி கேட்கிறாய்?

"நான் தர்ம தேவதை
நல்லவர்களுடன் தான் பேசுவேன்" என்றது

வாதத்தின் சாமர்த்தியத்தோடு
வழக்காடத் துணிந்துவிட்டேன்.
நான் நல்லவனெனில்
நீ ஏன் குற்றம் சுமத்துகிறாய்?

"ஊருக்கு நல்லதுகூறும்
உனையும் தூய்மையானவனாக்குவதே
என் எண்ணம்" என்றது

மேலும்...

"இயலாமையிலும் பொறாமை
இம்மியளவும் வந்ததில்லையா?
சின்னஞ்சிறிய விசயத்திற்கும்
சோகக்கண்ணீர் வடித்ததில்லையா?
உன் அவசர முடிவுகள்
உன்னுடனுள்ளோர்களைப் பாதித்ததில்லையா?
அன்பு இருந்தும் அவற்றை
அவர்களுடன் பகிர்ந்ததுண்டா?
குற்றம்சாட்டும் உனது கைகள்
களங்கமற்றதுதானா?" என்றது

வெட்கி நின்றேன்
வேதனைப் பட்டேன்
என்னைப் பற்றி நானே
உண்மையுரைப்பதை எப்படித் தடுப்பேன்
உதாரணப் புருஷனாகும் வரை?!

Thursday, July 10, 2008

உம் என்றால் கவிதை

தீக்குச்சியும் பெண்களும்
~~~o~0~0~0~o~~~
இரண்டுமே அவர்களின்
அனுமதியில்லாமல் அவ்வப்பொழுது
விளக்கேற்றக் கொளுத்தப்படுகிறது.

காதலும் மரணமும்
~~~o~0~0~0~o~~~
காதலில் சம்மதமும்
வாழ்க்கையில் கடமைகளும்
நிறைவேறாது போனால்
நிச்சயம் இரண்டுமே கொடியதுதான்.

குளமும் உழவன் வயிறும்
~~~o~0~0~0~o~~~
மழையின்றிக்
காய்கிறது
குளமும் உழவன் வயிறும்.

போக்குவரத்தும் ஓசோன் ஓட்டையும்
~~~o~0~0~0~o~~~
அறிவியலின் அறிவில்
பெருகிக்கொண்டே இருக்கிறது
போக்குவரத்தும்,
ஓசோன் ஓட்டையும்.

தன்னுடைமையும் நகமும்
~~~o~0~0~0~o~~~
வளரும் போது
அழகாய்த் தெரியும்
அடுத்தவர் மீதான தன்னுடைமையும்
நகமும், ஆனால் இரண்டுமே
நறுக்கப்பட வேண்டியவைகளே.

Wednesday, July 9, 2008

நானும் ஒரு நடிகன்தான்

உள்ளத்துக்கடியில் மறைந்து
உள்ளிருக்கும் வார்த்தைகளை
உதட்டு நுனியின் ஓரத்தில்
உருமாற்றம் செய்கிறேன்

இந்த உண்மையை
இருவரும் உணர்ந்திருந்தாலும்
வெளிப்படையாய்
வெளிக் கொணர்வதில்லை

என்னை மதிக்காதவன்
என்றைக்காவது, ஒரு
காரியத்திற்காக என்னிடம்
கலகலப்பாகப் பேசும்பொழுது

நானும் ஒரு நடிகன்தான்!

Tuesday, July 8, 2008

முகம் தேடித் தொலைகிறேன்

பிறந்த பொழுதே
பல அடையாளங்களோடே
பிறந்திருக்கிறேன்.

சாதி,
மதம்,
மொழி,
ஊர்,
நாடு,
குடும்ப கௌரவம்,

இவையாவும் என்னை
ஈன்றவரின் அடையாளங்கள்
இன்று என்னுடன்
ஒன்று சேர்ந்து கொண்டது.

அறிவும்,
அனுபவமும்
போக வேறெதையும்
பிச்சையிட வேண்டாமெனக்கு.

இவையன்றி நீங்கள்
இணைத்தவையாவும்
என்னைப் பிற மனிதனிடமிருந்து
எட்டி நிற்க வைக்கிறது.

எனது சமுதாய முகத்திரையை
எடுத்து எறிய முயற்சித்தும்
முடியாதவனாய் நிற்கின்றேன் - என்
முகம் பார்த்ததும்
நீ இன்னாருடைய மகன்தானே
நின் அடையாளங்கள் இதுதானே
என்று கேட்கும்பொழுதெல்லாம்
என் முகம் தேடித் தொலைகிறேன்.

Monday, July 7, 2008

உண்மை கசக்குமா?

நகைச்சுவையா படிங்க.......

தூரத்திலிருந்தே கோடித்
தூறலைப் பொழிந்ததுன் முகம்,
தாமரையாய்த் தெரிந்தது
தேன்சுரக்கும் உன் இதழ்,
விஜயனாக எனை ஆக்கிவிடும் உன்
விற்புருவம் எப்பொழுதுமே அழகு,
சுவாசம் இழுக்கும்
சீரான மூக்கினிலே நேசம் வரும்,
சுருள் முடிக்கடியில் இருக்கும்
சோடிக் காது மடல் இனிமை,
தூரத்திலிருந்தே உன்னிடம்
தொலைத்துவிட்ட மனதை
அதிரடியாய்ச் சொல்லிவிட
அதிகாலை வந்த நான்
ஒப்பனை இல்லாமல்
ஓய்ந்திருக்கும் உன் முகத்தால்
தூரப்பட்டு குழம்பிப் போய் நிற்கிறேன்,
தெரிவது நீயா உன் தாயா?!

Friday, July 4, 2008

சிறகடிப்புகள்

பெற்றோரின் பிம்பங்களில்
புதைந்து போன சுயத்தைக்
காண முடிகிறது

எல்லை இல்லா
எதிர்பார்ப்புகளின் சுமையின்
ஒரு மாத விடுப்பை
ஓரக் கண்கள் காட்டுகிறது

நாளையின் கவலைகளில்
நசுங்கிய நினைவுகள்
இன்றைய கனவுகளில்
இறக்கை வளர்த்தது புரிகிறது

அட்டவணையிலேயே
அடங்கிப் போகும்
அன்றாட வாழ்க்கையின்
அகோரப் பிடியிலிருந்து
விடுபட்டது தெரிகிறது

கணக்குப் பூதங்களிலும்
காகிதப் பேய்களிலும்
பயந்து ஒதுங்கிய
புன்சிரிப்பு வாய்விட்டு
வெளியே வந்து வழிகிறது

ஒவ்வொரு நிமிடமும்
ஓராயிரம் பூக்களின்
அணிவகுப்பாய்த் துள்ளும்
அந்தச் சிறுவனின்
மேகக் கனவுகளுக்கு
முற்றுப்புள்ளியாய்ப் போனது
இன்னும் மூன்று வாரம்தான்
இந்த விளையாட்டையெல்லாம்
மூட்டைக் கட்டிடனும் என்று
முணங்கிய தந்தையின் சொல்லில்.

Thursday, July 3, 2008

கூடு விற்ற பறவை

இருபது ஆண்டுகளாக
இந்த வீடும் என் அங்கம்.
நிலத்தடி உப்பு
நீரில் பெயர்ந்துவிடும் சில
சுண்ணாம்பைப் பார்க்கும்போது
சோகம் தொற்றிக்கொள்ளும்
எனது கண்களில்.

இந்த நிலத்தடி நீர்
இப்படி உப்பாய்ப்போனது
ஒரு வேளை நான்
ஓயாமல் சிந்திய
வியர்வைத் துளியாலிருக்கும்.

செங்கலின் சிவப்புகளில்
சின்னச் சின்னதாய்
சிந்திய குருதி கலந்திருக்கும்.

தோட்டத்தின் பச்சையில்
தினம்தோறும் தவறாது
நான் ஊற்றிய அடிகுழாய்
நீர் கலந்தே இருக்கும்.

மெத்தை சுகத்தை விட
மெருகேறிய இந்தத்
தரையில்தான் எனது
தினசரித் தூக்கம்.

அங்குலம் அங்குலமாக
அங்கமெங்கும் கலந்துபோன
வீட்டை விற்றுவிட்டு
வரதட்சணைக் கொடுத்துவிட்டுச்
செல்கிறேன் எனது
சொந்த ஊருக்கு.

இந்த வீடும்
இப்பொழுது புகுந்தவிட்டில்
இருக்கும் என் ஒரே மகளும்
இனி புதிய கைகளில்
இன்பமாய் இருந்தாலே போதும்.

Tuesday, July 1, 2008

பங்கு போடுங்கள்

என் விரல்களே
என் கண்களைக்
குத்தி நிற்கின்றன

என் குருதியாவும்
எங்கெங்கோ சிந்தி
தெரித்துச் சிதறுகின்றன

என் நிழல்களே
உடல்களை துரோக
வெயிலில் வாட்டுகின்றன

இதையெல்லாம் கண்டு
இகழ்ச்சியடையத்தான்
இன்னும் உயிர்
இந்த உடலில் ஒட்டியிருக்குதா?

சொத்துக்களைப் பிரிப்பதில்
சண்டையிடும் என் மக்களே
இறந்து விட்ட என் கணவரை
இடுகாடு வரையாவது
எடுத்துச் செல்லுங்கள்
என்னவருக்கு நானே
இடுகிறேன் கொள்ளி.

ஈன்ற இந்த
ஈனப்பிறவியின் வயிற்றையும்
பங்கு போட்டுவிட்டுப்
போய்விடுங்கள் அங்கேயே!

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal