என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்

என்னைப் பற்றி...

My photo
நல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...

படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

http://groups.google.co.in/group/oliyavan
பதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது

Saturday, August 30, 2008

ஈசனுக்குப் பாதிதானே

ஈசனுக்கு கூட பாதிமனம் இடப்பக்கம் மட்டுமே
என் நேசனுக்கு நான் முழுப்பக்கம் ஆனேனே
பிறந்து வளர்ந்த இடம் மறந்து மணத்தாலிடம்
பெயர்ந்து வாழ்வதும் புதிய ஜனனமே ஆகிடும்

உன் காதலால் கசிந்து வளைகிறேன் நாணலாய்
என் காதலா நின்னன்புகண்டு பொழிகிறேன் தூறலாய்
பெண்ணிடத்து நீ கொண்ட பண்புதனில் சிலிர்க்கிறேன்
உன்னிடத்தே வாழ்ந்துன் மடியிலேயே மடிகிறேன்

புதியதென எல்லாமும் புலம்பெயர மாறுமே - இருப்பினும்
பழகியதென நீயதை மணம் முடிக்கும் முன்பே
மாற்றினையே மணாளா, தேனாய் என் காதிலின்று
ஊற்றினையே காவலா, புதிதாய் பிறந்தேனே நானின்று

சொந்தமென்று என்னை மட்டும் நம்பி நின்ற பெற்றோரை
உந்தன் உறவென்று போற்றி குடிபெயரச் சொன்னவரே
ஈசனுக்கு கூட பாதிமனம் இடப்பக்கம் மட்டுமே
என் நேசனுக்கு நான் முழுப்பக்கம் ஆனேனே!

Tuesday, August 26, 2008

படங்களும் கவிதைகளும் - 3



நம்பிக்கை
~~o~0~o~~
நண்பர்களும்
நம்பிக்கையும் போதுமே
துள்ளிக் குதித்து
தூவானம் தூவும்
முகில் மேல் ஏற!



புண்ணியமாகட்டும்
~~~o~0~o~~~
புன்னகை பூக்கும்
பூவிதழ்கள்தோரும்
பெருகிடுமே இன்பங்கள்
அருந்திடுமே துன்பங்கள்
மனிதக் கொடியில்
மடல் விரித்து
கொடியாய்ப் பரவும்
புன்னகைகளால் குளிரட்டும்
புண்ணிய பூமி!

Friday, August 22, 2008

அப்பனாத்தா நீதான்

வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம்
கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம்
ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா
உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா
காரு புடிச்சு பத்திரமா ஏத்திவிட்டு
கதவு ஓசபடாம பக்குவமா சாத்திப்புட்டு
துண்டெடுத்து வேர்வையோட கண்ணீரும்
தொடச்சுபுட்டு மீசைய முறுக்கினதுன் வீரம்

அம்மா அம்மான்னு பலசொல்லு காதில்விழும்
ஐயா ஐயான்னு இந்தப்புள்ள மட்டும் அழும்
கண்ணு போன பெரியாத்தா
ரெண்டாம் கல்யாணத்துக்கு சொல்லிப் பாத்தா
பொஞ்சாதி பொண்ணு ஆத்தா எல்லாமே நாந்தான்னு
பெருமையா நீ சொன்னப்ப கலங்குனது என்கண்ணு

வயித்தப் புடிச்சுகிட்டு வழியேதும் தெரியாம
சமஞ்ச சேதி உன்கிட்ட சொன்னது இந்தமக
ஊருகூட்டிப் பந்தலிட்டுக் கெடா வெட்டுன
தங்க வளையலும் தோடுமா நக பூட்டுன
சந்தி முக்குல என்ன கேலி பேசுன பையல
நீ பந்தாடுனதப் பார்த்துபொறவு வார்த்தையேதும் வரல

மெத்தப் படிக்க டவுனுக்குப் போனே(ன்)
என்னத் தேடி நீயும் மெலிஞ்சுப் போன
பொண்ணுங்ககூட பெருசா அரட்டையடிச்சேன்
பையகள கொஞ்சம் கேலிசெஞ்சு வச்சேன்
கூத்துக் கேலி கும்மாளத்தோட
காதலும் வந்து சேந்துக்கிட
வீட்ட விட்டு வருவியா என்கூடன்னு
கேட்டுப்புட்டான் கேள்விய பட்டுன்னு
வீட்டுச் சம்மதம் வாங்கியாரேன்
கெடைக்காட்டி உங்கூட ஓடிவாரேன்ன்னு
சொல்லிப்புட்டு அழுது வடிச்சேன்
கண்ணீரோடு ஐயா பாசம் கொஞ்சம் கரைச்சேன்
படிச்சு முடிச்சு ஊரு வந்தே(ன்)
பாசம் கொஞ்சம் மறந்து வந்தே(ன்)

எப்படித்தான் புரிஞ்சுதோ பாவிமக நெனப்பு
கல்யாணத்துக்குத் தேதி குறிச்ச எனக்கு
பொண்ணு பார்க்க வருவாகன்ன
சீக்கிரமே கல்யாணம்ன்ன
மொத மொதலா என் மனசு முழுசா
அம்மாவத் தேடி அழுதுச்சுப் புதுசா
சீவி முடிச்சு சேல உடுத்தி சிங்காரமா
வந்து நின்னேன் ஒரு பொணமா

காப்பி கொடுக்க குனிஞ்சு நின்னேன்
மாப்பிள்ள கைபடவும் துடிச்சுப் போனேன்
பதட்டத்துல மாப்பிள்ள மொகம் பார்த்தேன்
பாவிப்பய நான் காதலிச்ச பையதேன்
ஓடிவந்து உன்னைக் கட்டிப்புடிச்சு நானழ
ஆத்தா நீ அழாதடான்னு சொல்லி நீயழ
ஆத்தா நியாபகம் அழிஞ்சுடுச்சு எம்மனசுல
அப்பனாத்தா நீதான்னு கண்ணீர்விட்டேன் நிக்கல

Thursday, August 21, 2008

படங்களும் கவிதைகளும் - 2



பத்துநிமிடம்
~~~o~0~o~~~
அடர்ந்த வாகனப் புகையும்
அடங்காத நகர ஒலியும்
நீர்த்துப் போகும்
நீண்ட புல்வெளியில்
பத்து நிமிடமாவது
படுத்துக்கிட, பசுமையான நினைவுகளோடு!



நினைவிலிட்டுக்கொள்
~~~o~0~o~~~
பகலவனின் கதிர்கள்
பாதம் உரசும்முன்
விழித்தெழுந்து
விண்ணில் மறையவிருக்கும்
விண்மீன்களுக்கு வணக்கம்
சொல்லிவிட்டு இன்றைய
செயல்களை நினைவிலிட்டுக்கொள்!

Tuesday, August 19, 2008

படங்களும் கவிதைகளும் - 1



புன்னகை செய்!
~~~~~o~0~o~~~~~
வானத்தில் வண்ணவில்,
வயக்காட்டில் நிறைந்த நெல்மணிகள்,
குழந்தையின் சிரிப்பு,
பழுத்து உதிரும் இலை,
இவையாவும் கடக்கும்போது
இதழோரத்தில் புன்னகை செய்!




நடந்து பழகு
~~~~~o~0~o~~~~~
மடியின் கணினியில் உலகமும்
கையடக்க பேசியில் சுற்றமும்
குளிரூட்டி அறையில் வானமும்
சுருங்கிப் போன வாழ்க்கையில்
நண்பனுடன் சுகமாய் முப்பது
நிமிடமாவது நடந்தால் நன்று!

Monday, August 18, 2008

காதலின் உச்சம்




காட்சி: நெடுநாள் காதலர்கள் திருமணம் முடித்து கட்டில் அடையும் தருணம். அங்கே புதிதாய்ப் புரிதலுக்கு எதுவுமில்லை, ஆனால் புதிதாய்க் கொடுத்துப் பெற நிறைய இருக்கிறது. அங்கனம் இது ஒரு பாடலாய்.

[ஆண்]
காதலின் விறகெடுத்து
காமத்தின் தீ கொளுத்தி
குளிர்காயும் கண்ணே
காதலன் துகிலுறித்து
காதலின் கண்பொத்தி
உயிர்த்தீக் குளிக்கும் பெண்ணே

இச்சென்று முத்தமிட்டு
அங்கங்கே தொட்டுவிட்ட
ஆதிவாசிப் பெண்ணே
மிச்சமென்று வெட்கம்
அங்கங்களில் ஓட்டியிருந்தால்
அகற்றிவிடு அது இங்கே வீணே

மெத்தை வேண்டாம்!
இரை தேடிக் காத்திருந்த
புலி தேடி வந்த மானே
மோட்ச நேரத்தின்
காதல் வெப்பத்தில்
எரிந்திடும் அது தானே

[பெண்]
எரிமலையின் கணவாயில்
ஏளனமாய்க் கல்லெறிந்தால்
என்னவாகும் தெரியாதா
பெண்ணிவளின் மேனியில்
பெரிதாகக் காமமெரிந்தால்
துரும்பாவாய் புரியாதா

விண்ணிலிருந்து எட்டிப்
பார்க்கும் நிலவே
வெட்கம் கொண்டு மறையட்டும்
நம்மிலிருந்து எட்டிப்
பார்க்கும் தீயிலே காமம்
கரைந்து காதல் வாழட்டும்

நிலவின் மடியில்
நீள இரவு கழிக்கும்
சூரியன் நீயே
பொழியும் கதிரால்
மடியில் உயிர் ஒளிர்ந்தால்
நானும் இனி தாயே!

- ஒளியவன்

Monday, August 11, 2008

ஏமாற்றங்கள்



பூக்கள் நிறைந்த
பாதைக்கு ஆசைப்பட்டே
பாதங்கள் பலவீனமாகிறது
சின்னஞ்சிறு கற்களுக்கே
சிதைந்து போகிறது பயணம்

வாசகர்களுக்கு ஆசைப்பட்டே
வாசிக்கப்படும் கவிதைக்கு
வாழ்த்து சொல்ல ஆளில்லையெனில்
பேனாவும் கண்ணீர் சிந்தி
பொய்யாக அழுகிறது

அள்ளி அனைத்து
பிள்ளை பெற்றுக்கொள்வதான
பெருங்கனவிலேயே வளர்கிறது
சொல்லப் படாத காதலுக்கான
சோகத் தாடியும்

முதல் மதிப்பெண்ணும்
முக்கியக் கற்பனையிலேயே
முகம் தெரியாமல் வலுவாகிறது
தற்கொலைக்கான காரணங்களும்
தாம்புக் கயிறுகளும்

தெருவெங்கும் தேடியலையும்
தேவதைகளின் தேடுதல்களிலேயே
திருமணங்களின் பொழுது
விவாகரத்திற்கான முதலெழுத்து
வெகுவாக எழுதப்படுகிறது

பிறந்த மகன்
பிறந்த மேனியிலிருக்க
லட்சக் கணக்கில் காசு கொட்டும்
லட்சியக் கற்பனைகளிலேயே
மகனின் இசையார்வம் வற்றிவிடுகிறது

எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களே!

- ஒளியவன்

Sunday, August 3, 2008

நட்புப் பாலம்

Friday, August 1, 2008

விதவை

எட்டு வைத்ததிலிருந்தே
பொட்டு வைக்கும் பழக்கம்
பிறந்த மேனியிலிருந்தே
கரத்தில் வளையிட்டது வழக்கம்
தோட்டத்துப் பூக்கள் எல்லாம்
தொடுத்துச் சூடுவேன் தினமும்
வண்ண ஆடைகள் யாவும்
என்னில் உடுத்தினேன் நிதமும்

வயதின் பருவத்தில்
வாய்த்தது திருமணமும்
ஈராண்டு காலத்தில்
ஈன்றது ஒருமகனும்
காலத்தின் கோலத்தில்
கலந்து கணவருயிர் போனதுவே
சோகத்தின் சாபத்தில்
சிக்கியதென் வாழ்வதுவே

விழாக்களின் மேடையில்
வேலையில்லை ஒதுக்கினரே
வம்புதும்பு பேச்சினில்
வருந்தினேன் மகிழ்ந்தனரே
வெண்மேகமது உயிர்த்துளியில்
கார்மேகமென நிறம் மாறுது
பெண்தேகமது வாழ்வினில்
வண்ணமென்பது இனியேது?

விதவைக்கு மாப்பிள்ளையாய்
வேறெங்கும் ஆளில்லை
மறுமணத்தின் மணப்பெண்ணாய்
ஒரு கன்னியே கேட்கும் சில மாப்பிள்ளை
கற்பென்னும் வார்த்தைக்கு
விற்றுவிட்டீர் பெண்பாலை
விதவையென்னும் சொல்லுக்கு
விளக்குங்களேன் ஆண்பாலை?!

நன்றி: அதிகாலை இதழில் வெளியிட்டமைக்கு

இங்கே கண்தடம் பதித்தவர்கள்

நாட்காட்டி

தமிழ்வெளி

More than a Blog Aggregator

தமிழ் கணிமை

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines

Thiratti.com

அதிகாலை

Instant dynamic Tamil News Portal