என் அன்பிற்கினிய நண்பர்களே, ஏறத்தாழ இந்தக் கவிதையை எழுதி 7 மாதங்கள் தாண்டிவிட்டன. ஒரு முழு நீளக் கவிதையாய் இதை அளித்த அன்று பகுதி பகுதியாக இட்டால் வாசிப்பது எளிது என்று பலர் கருத்துக் கூறினர். அதன் பொருட்டு அன்று எழுதிய அந்தக் கவிதையை எந்த மாறுபாடுமின்றி, சில எழுத்துப் பிழைகளை மட்டுமே திருத்தி அனுப்புகிறேன். இது மொத்தத்தில் 46 பகுதிகளாக வெளிவரும். தினமும் ஒன்று வீதம் மொத்தம் 46 நாட்களில் முடிந்துவிடும். இதில் சனி, ஞாயிறு, வேறு ஏதேனும் அவசர நிலை தவிர்த்து இதர நாட்களில் தொடரும். ஏற்கனவே எழுதி வைத்து விட்டதால், இதில் இடையூறு ஏதுமிருக்காது என நம்புகிறேன்.
இதில் எழுத்துப் பிழைகள், ஒரு கருத்து முன்னரும் பின்னரும் முரண்படுவது போல எழுதியிருந்தால் தயவு கூர்ந்து தெரியப் படுத்துங்கள். நன்றி.
காதல், கானகம் - பகுதி 1
காதல்.....காதல்.....
கதவு வழியே வரும்
அழைப்பு ஓசை....
காட்டை ஆளும்
கலியுகத்து இராமன்.
பொது அறிவுகளில்
புதைந்தவன்.
தரணியில் தனக்கென
தனி உலகம் கொண்டவன்.
காடுகளை
கடுமையாக நேசிப்பவன்.
மானுடம் மறந்தவர்களை
மனிதத்தோடு விமர்சிப்பவன்.
மனிதர்களையும்
மிருகங்களையும்
ஒருங்கே நேசிப்பவன்.
அன்பு என்பதின்
அடைமொழி இவன்.
பிறப்பதறியாமல் பிறந்து
பிணம்தின்னிக் கழுகளாய்
பணம் ஈட்டி
பின்னொரு நாளில் இறக்கும்
பாவி மனிதனாய் வாழ்வதிலென்ன பயன்?
என்றெண்ணுபவன்.
சந்ததியினருக்கு
சொத்து சேர்க்காதவன்
ஆதரவற்ற குழந்தைகளுக்கும்
அனாதையாக்கப் பட்ட
சில பெற்றோர்களுக்கும்
சில காலமாக
இவன் ஒரு தாய்.
"இனிய இல்லம்"
இத்தகு சொர்க்கத்திற்கு
இவன் தந்தையிட்ட பெயர்.
குழந்தை பிறந்ததும்
அழுவது பிள்ளையாகத்தான்
இருக்கவேண்டும்
வேறு யாராகவும் இருக்கக் கூடாது.
ஒருவன் இறக்கும் பொழுது
அழுவது சமுதாயமாக இருக்க வேண்டும்
அவனாக இருக்கக்கூடாது.
இவன் இறந்தால்
கண்ணீர் வடிக்க
ஆயிரம் பேர் இருக்கிறார்கள்
அதுவே அவன் சொத்து.
அறிவுமதி
அவனது உண்மைப் பெயர்.
காதலி மதி மீது
கொண்ட காதலால்
காதல் என
பெயர் மாற்றிக் கொண்டவன்.
(தொடரும்....)
அடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து
என் கவிதைகளுக்கு இனி இங்கே செல்லவும்
என்னைப் பற்றி...
படைப்புகளை மின்னஞ்சலில் பெற...
Wednesday, October 1, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதைக்குள் கதையா
தொடக்கமே அருமை
வாழ்த்துகள்
மிக்க நன்றி உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு
Post a Comment